Tuesday, September 4, 2012

தீண்டலும் தீண்டாமையும்

நான் வாய் பேசத் தொடங்கியதுமே
கீழ்வானிலே உதித்த விடிவெள்ளியை
அழகுதேவதை வீனஸை
எந்த ஒரு விண்மீன் வழிகாட்டலுமின்றிக்
காணக் கிளர்ந்தவர்கள் போல்
ஓடோடியும் வந்து
எத்தனை காதலுடன்
உன் இரு கைகளாலும்
என் கைகளைப் பற்றி
உருகி நின்றாய் என் தெய்வமே!

திடீரென்று உன் கண்களிலே
ஒரு சந்தேகம், கலக்கம்.
பற்றி நின்ற ஒரு கையை மெல்ல விடுத்து
என் தோளோடு தோளாய் மெல்ல நெருங்கி
அக் கைகளால் என்னை ஆரத்தழுவியபடியே
தொட்டுத் தடவித் தட்டிக் கொடுக்கும் பாவனையில்
எனது முதுகுப் பரப்பில் எதையோ
உன் விரல்கொண்டு தேடுகிறாய்.

என் தகுதியின்மையைக்
கண்டுபிடித்துவிட்டவன் போல்
என்னைத் துயருக்குள் தள்ளிய
என் விலக்கம் கண்டு
விம்மினேன், என் தெய்வமே!

இன்று சின்னங்கள் பலப்பலவாகி
எங்கும் பரவிநிற்கும்
உன் தீண்டலும் தீண்டாமையும்
என்னைச்சுடும்
எக் குற்றங்களையும் மன்னித்துவிடும்
காதற்பெருக்கின்
அழிவிலாப் பேரனுபவமன்றோ
என் தெய்வமே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP