Wednesday, September 5, 2012

யாராவது ஒரு பெண்ணுக்கு

காலையின் அமைதியை
விடாது துன்புறுத்துவதுபோல
ஒலிக்கிறதென்ன, இந்த அணில்களின்
உரத்த உரையாடல் ஒலி?

இயற்கையின் தனிச் சிறப்பான
நோக்க மொன்று
தாளாது உடைந்துபோன
பொறுமையின்மையோ
இந்த வேதனை?

போர்க் கொடுந் துயர்களுக்கன்றி
வேறெதற்கும் பயன்படா
இனக்குழுப் பற்று மீது மூண்ட வெறுப்போ?

பூர்வ காலந்தொட்டு
யாராவது ஒரு பெண்ணுக்கு
தன்னறிவின்றியே
ரொம்பத் தீவிரமாய்
தன் குழுவை மீறி
பகைக் குழு ஆணின் மீது
மூள்கிறது காதல்.

இன்னொரு கிரகத்திலிருந்து
தவளைபோலும் முகமுடைய
ஓர் ஆண்வந்து நிற்கையிலும்
அவன்மீதும் காதல் மூளும்
இந்தப் பெண்ணுக்கு,
என் அருமைக் கண்ணுக்கு!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP