Sunday, September 2, 2012

பள்ளம்

மண்ணிலிருந்து விண்ணோக்கி
எத்துணை உயரம் சென்றாலும்
நம் உயரத்தை ஒரு பொருட்டாய்ப் பார்க்காத
விண்ணை விடுத்து
மண்ணின் இதயத்தைத் தொட்டறியவோ
இத்துணை பள்ளத்துள் போய்
அமைந்துகொண்டது உன் வீடு?

நாலா திக்குகளிலும் பொழியும்
மழை தழுவிய வீடுகளின்
துன்பக் கசடுகளெல்லாம்
உன் இல்லம் புகுந்து
உன் கால்களைத் தழுவிப்
பேசும் பேச்சுக்குச் செவிமடுக்க வேண்டுமென்றோ
இத்துணை பள்ளத்துள் போய்
அமைந்து கொண்டது உன் வீடு?

இரவோடு இரவாய்
உட் புகுந்த அவ்வெள்ளத்தை
தடுப்பணை கட்டி
இறை இறை என்று இறைத்துத் தள்ளி
துடைத்துத் தூய்மை செய்து
நிம்மதிப் பெருமூச்சுடன்
உடல் துவள
நீ துயிலத் தொடங்குவதற்கு முன்னே
விடிந்துவிடும் பொழுதுக்காகவோ
இத்துணை பள்ளத்துள் போய்
அமைந்துகொண்டது உன் வீடு?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP