Wednesday, September 19, 2012

வெண்மலர்கள்

தன்னைப் போலவே
சக மனிதனும் வாடுவதறியாது
துயர் உழன்றுகொண்டிருக்கும்
மனிதர்களை விட்டோடிப் போய்த்
தகித்து மலர்ந்து நிற்கும் தனிமையோ,
அமைதி உறையும் மலைப் பிரதேசத்தின்
குளர்மை நெருக்கம் தந்த
நீர்நிலையின் நிச்சலனம் காட்டும் தன்னழகில் தானே லயித்து
இன்புற்றிருக்கும் ஒரு வெண்மலர்?

தன் எதிரொலியாய் பிரதிபிம்பமாய்
தன்னைத் தொடர்ந்துவரும்
காதலின் கரம்பிடித்து நிற்கும் இணையோ,
தேன்நிலவுக்காய்
மீண்டும் அதே நீர்க்கரையோரம் வந்து
தங்களைத் தாங்களே உற்று
இன்புற்று மகிழ்ந்து கொண்டிருக்கும்
வெண்மலர்கள்?

அத்தனை தூய்மை அத்தனை மென்மை
அத்தனை வெண்மையுடன்
உருக்கொண்டுவிடாது உலவும் உருவோ,
பசும்புனல் பள்ளத்தாக்குகளினின்றும்
மேலெழுந்து
மலைமுகடுகளில் உலவிக்கொண்டிருக்கும்
மஞ்சு?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP