Monday, October 1, 2012

அந்தச் சிறு பொழுதிற்குள்...

ஒவ்வொரு வீடும்
கடவுளையா எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது?

அவர் புறப்பட்டுவரும் இடத்தையும்
சென்று சேருமிடத்தையும்
அறிவரோ மனிதர்கள்?

அவரை வரவேற்று
உடனமர்ந்து உரையாடி
உண்டு மகிழ்ந்தா
வாழ்ந்து கொண்டிருக்கிறது
வீடு?

அவர் வந்த நேரத்திலிருந்து
தம்பதியினர் இருவரும்
வழி உணவுப் பொட்டலத்துடன்
அவரை வண்டியில் அமர்த்தி
அவர் புறப்பட இருக்கும்
நேரம் வரைக்குள்ளாகவோ
இத்துணை பெரும் பணியொன்றைச்
செய்து முடித்துள்ளார்கள்?

அவர் சென்று சேருமிடம்வரை
இத் தண்டவாளத்தை அமைத்து
அதில் ஓடும் ஒரு வாகனத்தையும்
அமைத்துள்ளார்கள்!
விண் முழுவதையும்
மேகத்தால் அலங்கரித்துள்ளார்கள்!
வியர்க்க வியர்க்க ஓடி ஓடி
பைம்புனல்களையும் பசுவெளிகளையும்
விரித்துள்ளார்கள்.
களி துள்ளும் ஆர்வத்துடனும் வியப்புடனும்
அமர்ந்தும் எழுந்தும் பறந்தும்
அவரை நோக்கிச் சிறகடிக்கும் வெண்கொக்குகளே
மிகப் பெரிய மதிப்பையும் கவுரவத்தையும்
நல்கி நிற்கும் மலைகள், மரங்கள், காடுகள்
தோப்புகள், புல்வெளிகள், மலர்கள், பறவைகள் என்று
அத்தனையையும் அவருக்காக அவர்கள்...!
அந்தச் சிறு பொழுதிற்குள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP