Friday, October 26, 2012

குறியீட்டு எண்

எத்தனை நூறு வயது உனக்கு?
எத்தனை எத்தனை பருவகாலங்கள்
அதன் மீமிகைகள் மீதங்களின்
அதிர்ச்சிகளைக் கண்டவள் நீ?
ஒற்றையாய் இப்பூமி முழுக்கவே நிழல் தரத்
துடிப்பதுபோல் ஓங்கி விரிந்து கனன்று நிற்கும்
உன்னைக் கண்ட பிறகுமா
மனிதன் கோயில்கட்டிக் கொண்டிருக்கிறான்?

விம்மும் நெஞ்சோடு
உன் மேனியைத் தொட விழையும்
என் விரல்களின் ஆர்வப் பதற்றம்
உன்னை ஆரத்தழுவி
அமைதியடையவே முயல்கையில்
அவ் விரல் நுனிகளில் கனலும் குருதிமதிமீமிகை
உன் சொரசொரப்பான மேனியைத்
தொட்டு வாசிக்கிறது
அதிலே:
எண்ணற்ற விண்மீன்களும்
எல்லையற்ற வெளியுமான
இப் பிரபஞ்சம்,
அண்டவெளிக் குடும்பம்
அதிபேரற்புத அபூர்வப் பெருநிகழ்வான
பூமிக் கிரகம்,
ஆழிசூழ் நிலப்பரப்பு
மாநிலம்
மாவட்டம்
வட்டம்
ஊர்

இந்த இடம்
இதோ
இவ்வேளை
ஓருயிராய் உன்மத்தம் கொண்டு
ஒன்றி நிற்கும் நாம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP