Tuesday, October 2, 2012

எத்துளியிலும் இருக்கும் அதற்கு

எத்துளியிலும் இருக்கும் அதற்கு
கோயில் எதற்கு?

உணர்வுகள் கூர் ஆவதுண்டோ
நம் வழிபாட்டுச் சடங்குகளால்?

வேடிக்கையாயில்லையா
தனது பிரதிமைகள்முன்
தானே தலைகுனிந்து நிற்பது?

சுரணையும் அறிதலுமாய்ச்
சுடரும் உயிர்த்தழலையா
கழற்றிவைத்துவிட்டு நிற்பது?

பிறர் துயர் முன்னன்றோ
அவன் கண்கலங்க வேண்டும்?

தன் குற்றம் முன்னன்றோ
அவன் தலை குனிய வேண்டும்?

புதுப் புனல் சுழித்தோடும்
பசிய மலர் வெளியில்
களித்துப் புரண்டோடும் காற்று
ஒளிப்படுகையில் சிலிர்க்கையில்
நமக்கு வசப்பட்டுவிடாதா
செம்மாந்த வாழ்வின் இரகசியங்களை நோக்கித்
தீர்க்கமாக நம்மை உந்தும் ஆற்றல்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP