Friday, October 19, 2012

குழந்தை

தொலைக்காட்சி நேர்காணலில்
சும்மா சும்மா சிரித்துக்கொண்டே
பதிலளித்தாள் ஒரு சிறுமி

ஒரு பெரிய அலை வந்து
வாரிச் சுருட்டி எறியவும்
ரொம்ப தூரத்திலிருந்த
ஒரு குடிசையின் கூரைமேல் வந்து
பொதுக்கடீரென்று விழுந்திருக்கிறாள்

அப்போது ரொம்ப பயந்திட்டியோ?
வலிச்சுதோ?
சிரிக்கிறாள்

ஆசிரியர்களும் குழந்தைகளுமாயிருந்த
அனைவரும் பலியாகிவிட
தப்பிப் பிழைத்தவள் அவள் மட்டுமே.
அதற்குச் சிரிக்கிறாள்

பதினோரு நாட்கள்
பட்டினியோடு கிடந்து
யாரும் காணாது
உயிர் பிழைத்திருக்கிறாள்.
அதற்கும் சிரிக்கிறாள்

அந்தப் பதினோரு நாட்களும்
அழுது கொண்டேதான் இருந்தாயா?
ஆமாம் என்னும் தலையாட்டல்
ஏதோ காலையில் சாப்பிட்ட
பாயசம் குறித்து நலம் விசாரிக்கப்பட்டது போல

தனது கதை ஒரு காவியமாகவும்
தானொரு நட்சத்திரமாகவும்
மாறிவிட்டதை எண்ணியா
நாணம் கொண்டு
அவள் சிரிக்கிறாள்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP