Saturday, October 13, 2012

முகவரி

*தேவமோ?
நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியோ?
அடிபட்ட சிறுபுள்தாமோ?

அன்னவனைத்தான்
பேருணர்வுகளின் உதிரமாகும்
பேரியற்கை தாங்கும் ஆமோ?

வானமே இறங்கி வந்து
’உம்மை விட்டுப் பிரியேம்’ என்று
வேர் முளைத்துக் கிடக்கும் கால்கள்.
கதிரொளியில்
தரையெல்லாம் ஒளிரும் பொன் இலைகள்.
வருகை தவறாது வந்து மகிழ்ந்து
வாழ்த்தியபடியே இருக்கும் பறவைகள்.
வால் சுருட்டி கால்மடக்கி
அமைதியை
அசைபோட்டுக் கொண்டிருக்கும்
கனத்த உருவமுடைய கால்நடைகள்
அயர்வு தீண்டிவிடாதவாறு
மாறி மாறி வந்து காக்கும்
பருவத் திருவிழா அரண்கள்
(இன்று மரங்கள் பூத்தொளிரும்
இளவேனில் எழிற் காலம்)

தனித்துப் போன அந்த இல்லத்தை
வினோதமாய்ப் பார்த்துச் செல்லும்
வழிப்போக்கர்களிடையே
அன்பின் துயருடையோர் கால்கள்மட்டும்
அவ்விடம் ஓர் *தவக்கம் விட்டுச் செல்வதென்ன?


*தேவம் = தெய்வீகம், *தவக்கம் = தயங்கி நின்றுவிட்டுச் செல்லுதல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP