Friday, October 5, 2012

நீர்மையும் பசுமையும் தகிப்புமாய்...

இழக்க வொண்ணாத் தாயகமோ;
அமைதியும் அழகும் இன்பமும் ஏற்றமும்
நம்மைச் சுறுசுறுப்பாய் வைத்திருக்கும்
அசவுகரியங்களுமாய்
ஒளிரும் காதற் தனி இல்லமோ
காலத்தாற் சீர்குலைந்தவை அறியாதே
காலம் விட்டகன்று நிற்கும் தேனோ;
ஆடுகள் மேய்த்தபடியோ
எருதுகள் குளிப்பாட்டியபடியோ
உலவும் காதல்மடம் ஒளிரும்
கன்னிச் சிறு பெண்ணவள் தாய்மடியோ;

விஷம் விளையும் நிழல்களிற் போய்
நலம் நாடிக் கிடக்கா தனிமையோ;
யாவுமுணர்ந்த மனிதனின்
வலியும் மவுனமுமேயான வரைபடமோ;
நன்மையினதும் தீமையினதும்
ஊற்றுக்கண்கள் காட்டும் ஓவியமோ;

விடியலும் தனிமையுமாய்
நெளிவு குழைவுகளுக்கிடமளிக்கா
வல்லுரமிக்க மெய்மையோ

நீர்மையும் பசுமையும் தகிப்புமாய்க்
கனலும் இந் நிலக் காட்சி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP