Saturday, October 13, 2012

இயற்கையுட் புகுந்து

இன்னும்
தன் மைந்தனுக்கு
வயது வரவில்லை எனத்
தாய்மை கடைப்பிடிப்பவனோ
இடுப்பில் உலகேந்தி
பாரம் சுமந்தலைகிறான்?

உலகம் தன்னைத் தானே
காத்துக் கொள்ளட்டுமென்று
கவலை துறந்தவனோ
இயற்கையுட் புகுந்து
இன்பத்தை இயற்றுகிறான்?

சற்றே நெளிந்த
தென்னை மரத்தின்
வேண்டாத அண்மை காரணமாய்
குறுக்கு ஒடிந்து விழுந்து விடும்போல்
வலி தாங்கி
வளைந்து நின்றது
நெடிதோங்கிய பன்னீர்மரம்.

அதனை ஒரு கயிறால்
தென்னையோடு இழுத்துக்
கட்டிவிடுதல்தான் உத்தமம் என்று
கூடியது யோசனை. தென்னையிலும்
இரண்டு மட்டைகளை ஒடித்துவிடவேண்டும்.

இப்போது
என்றுமில்லாத அளவு மலர்களும்
என்றுமில்லாது ஒளிரும் வெண்மையும்
காதலும் நாணமும்
களிப்பும் கொண்டாட்டமுமாய்ச் சிலிர்த்து
ஒயில்கொண்டு நின்றது
காதல் தென்னையின் கரஅணைவில்
பன்னீர்மரம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP