Wednesday, October 10, 2012

நித்யானந்தம்

காலடிப் பள்ளத்தில்
மிகுதியாய்த் தேங்கிய நீரும்
இனித்த்தோ கொஞ்ச நேரம்?

தன் மரகதப் பெருஞ் செல்வம்
மளமளவென்று
முதிர்ந்து கனிந்து
இலை இலையாய் உதிர்ந்து கொண்டிருந்த
எழிற் கோலத்தில்
தன் மெய்மறந்திருந்ததோ அது?

ஈரத்தொடு வெப்பமும்
இணை சேர்ந்த அழற்சி
தன் வேர் தொடவே
அது திடுக்கிட்டதோ?

இலைகள் யாவும் உதிர்ந்து
உயிர்க்கிறுதியாய்
தன் உள்ளெலும்பு தைக்கும்
அனல் எரிக்கத் தொடங்குகையில்தான்
அது விழித் தெழுவதற்காய்த்
தீண்டி விட்டதோ துயரும்தான்?

வெள்ளம் மெல்ல வற்றிவிட
வேர் அழுகிவிடாது தப்பித்து
மெல்ல மெல்ல துளிர்த்துப் பெருகிப்
பெற்ற மீளுயிரின்
பல்லாயிரம் பொன்விரல்கள் துடித்து
காற்று வெளி வீணை மீட்டப்
பாடல் தொடங்கிவிட்ட போதும்
அது அனிச்சம் அறியாதது போலவே
தன் அதிர்ஷ்டம் எண்ணிக்
குதிக்கும் கொண்டாட்டமும் அறியவில்லை.

நித்யானந்தப் பிறவி இல்லை அது.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP