Tuesday, October 30, 2012

மழைநீர் சேகரித்தல்

அதோ அந்தத் தாமரை இலையைப் பாருங்கள்
அனைத்து வறுமைகளுக்குமான
மூலகாரணத்தைக் கண்டுவிட்ட தீர்க்கதரிசியும்
அசாதாரணமான செயல்வீரனும்போல்
தானே ஒரு பிட்சா பாத்திரமாக மேலெழுந்து
அசைகிறது மழை வேண்டி!

அது நீரின் இன்றியமையாமை தெரிந்து
நீரிலேயே தன் வாழ்வமைத்துக்கொண்ட
ஓர் உயிர்
நீரின் அருமையைச்
சதா உரைத்துக்கொண்டும்
செயல்படுத்திக் கொண்டும்
இருக்கும் ஓர் உன்னதம்

அதற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது
மழை என்பதும் மழைநீர் சேகரித்தல் என்பதும்
காலத்தின் அழுக்கினைப் போக்குவதும்
பூமியினைப் பேணுவதுமான
ஒரே செயல்தான் என்பது

இப்பூமியெங்கும் தலை உயரத்
தண்ணீர் தாங்கிகளாகவும் ஏங்கிகளாகவுமே
நின்றுகொண்டிருக்கும் தாவரங்களைப் பார்த்து
நாம் திருந்திக்கொள்ள வேண்டிய
திடீர் வேளை இல்லையா இது?

மழை என்பதும், மழைநீர் சேகரித்தல் என்பதும்
உள்ளார்ந்த அன்பின் வெளிப்பொருளின்றி வேறென்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP