Tuesday, October 16, 2012

கடற்கரைக் கோயில்கள்

கடல் நம்மை அழைத்தபோதோ
கரையோர வாழ்வோடு
(திருச்செந்தூர் வேலவா)
உன்னையும் நான் மறந்தேன்?

*கடலாட்டின் மகிழ் உச்சியிலோ
கண்டுகொண்டேன்,
எட்டும் தூரத்தில்தான்
அது தகதகத்துக் கொண்டிருந்ததை

கரிக்கும் இத்துயர்க் கடலின் அலைக்கழிப்பில்
களி கொள்ளும் வாழ்வுதான் வாழ்வா?
அஞ்சி நிற்பானை ஆட்கொண்டடிமையாக்கி
உணர்வழிக்குமிந்த
உயிரற்ற கற்கோவில்களின்
கணிதப் பிரம்மாண்டம்மான் அழகு என்பதா?
கலை என்பதா?

அமைதியற்ற இக் கடலினையே பார்த்து நிற்கிறேன்
கரை மணலெங்கும்
உணர்வழிந்த மனிதர்களின் மலக் கழிவுகள்.
நிற்குமிடத்தில் நின்றபடி
பார்த்து முடித்தாயிற்றா போகலாமா,
இன்னொரு கோயில், இன்னொரு ஸ்தலம்
என்றபடி எமது சிறிய வெள்ளை மாருதி வேன்

நூற்றாண்டுகள் மாறாத அழுக்கும் புழுக்கமும் இருளுமாய்
அட்டுப் பிடித்த விக்கிரகங்களுக்கும்
புனிதர்களின் நினைவுகளாய்
உயர்ந்த தேவாலய விதானங்களுக்கும் வெளியே
வான விதானத்தின் கீழ்
என்ன ஒரு பேரன்பு, தாய்மை, குதூகலம்!
பொங்கிப் பொங்கி எழுந்து
கரம் அணைத்து நீராட்டும் காதற் பெருக்கிற்கு
அட்டியின்றி
தனை அளித்து நின்றுவிட்ட
பாறைகளையும் ஒலியையும் கேட்டபடி
கடலையே பார்த்துக்கொண்டு நின்றேன்

அனைத்தையும் முடித்துக்கொண்டு
புத்தாற்றலுடன் பாய்ந்து செல்லத் தொடங்கியது
எங்கள் வாகனம்,
இயற்கை வெளியூடே...தம் வழியின்
பேரழகைக் கண்டுகொண்ட குதூகலம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP