Tuesday, October 30, 2012

ஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்

கொட்டாவியுடன் சோம்பல் முறித்தபடி
எழுந்திருக்கையிலேயே
இனிய அந்தத் தீர்மானம்
ஒரு காலைமலர்போல் பூக்கிறது

எத்தனை இனியது இப்பூமி!
எத்தனை இனியது இவ்வாழ்வு!
அவன் இதயத் துடிப்பினை ஆமோதிப்பதையே
தம் வாழ்வாகக் கொண்டனவோ, மேமே எனும்
அவன் ஆட்டுக் குட்டிகளும்?

அயல் கிராமத்திலிருக்கும் அவன் அத்தைமகளின்
ஆழ விழிகள்தாமோ,
விண்ணும் விண்ணளவு விரிந்து மிளிரும் இப்பூமியும்,
தன் அருமையை
ஆழ உணர்ந்தும் நீரும் இப்பறவைகளும் நிழலும்?

திரும்பும் வழியில் சற்று இளைப்பாறித்
தாகவிடாய் தணித்துச் செல்லும் சாக்கில்-
அவள் விழிகளில் அவன் காண்பதுவோ
அவன் ஆடுகள் மேயும் இவ்வுலகமன்றோ?

வழியெங்குமான காட்டுமலர்களிலும்
காய்ந்த புற்களிலும் கால் தைக்கும் முட்களிலும்
எலி ஒளியும் புதர்களிலும் சின்னஞ்சிறு உயிர்களிலும்
இந்தக் காற்று வெளியினிலும் கண்மாய் விழியினிலும்
எங்கும் ஒளி வீசுவது
அவளின் சொல்லொணா அன்பும் அழகுமேயன்றோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP