Tuesday, January 1, 2013

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும்

”அவர்களைத் தடுக்காதீர்கள்
அவர்களை என் அருகே வர அனுமதியுங்கள்” என்றவர்
தன் பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பின்தான்
தானாகவே குழந்தைகளை நாடி வந்தார்

மனித உறவுகளிலேயுள்ள
அதீத வன்முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல்தான்
இறுதியாக அவர் குழந்தைகளை நாடி வந்தார்
என்றும் சொல்லலாம்

இன்று அக் குழந்தைகளுக்கு அவர் இயேசு அல்ல
ஓர் ஆசிரியனும் விளையாட்டுத் தோழனுமாவார்.
மனிதர்களுக்கும் அவர் இயேசு அல்ல
கொஞ்சம் மனப்பிறழ்வும் கோழைத்தனமும்
தோல்விகளும் கூடிய அப்பிராணி

இன்று அவருக்கும் அவர் இயேசு அல்ல
அந்த மனிதன்!
மனுக் குலம் தன் தோற்றம் முதற்கொண்டு
கனாக் கண்டுகொண்டிருந்த அந்த மனிதன்
முற்றுணர்ந்தோன்,
கவிஞன்,
தீரன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP