Wednesday, January 2, 2013

அவனும் அவர்களும்

காலம் காலமாகவே
அவர்களுக்கு அவன்மீதும் நீதிமீதும்
இஷ்டமில்லை

அவனுக்குத் தடைவிதித்த
காலங்கள் போய்விட்டதனால்
அவர்களால் தடுக்க முடியவில்லை
அவனுடைய வளர்ச்சியினை

அவன் வளர்ந்தான்;
அவர்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
அவன் மேலும் வளர்ந்தான்;
கண்டு கொள்ளாமலிருக்கவும் முடியாமற் போனதனால்
அவனை அவர்கள்
தங்கள் தளபதிகளாய்
அடியாட்களாய்ப்
பெருமைப்படுத்திக்
கண்டுகொண்டார்கள்.
அவன் மேலும் வளர்ந்தான்;
மீண்டும் அவர்கள்
கண்டுகொள்ளாதிருக்கப் பார்த்தார்கள்.
அவன்மேலும் வளர்ந்தான்;
தங்கள் அடியாட்கள் கொண்டே
அவனை அவர்கள்
தீர்த்துக் கட்டும் வழிகளையெல்லாம்
உபயோகித்தார்கள்.
தப்பிப் பிழைத்து
அவன் மேலும் வளர்ந்தான்;
அவனை அவர்கள்
தங்கள் சரியாசனத்தில் அமர்த்தியபடியே
சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
துக்கமோ சந்தோஷமோ இன்றி
அவன் மேலும் வளர்ந்தான்
கட்டிப் பிடித்து
அவனோடு ஒட்டி உறவாடியபடியே
அவனை விஷம் வைத்துக் கொன்றார்கள்,
எவருக்கும் தெரியாதபடி,
தங்களை உருவாக்கிய அதே விஷம் வைத்து

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP