பிள்ளைப் பருவம் போலும்...
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
Poet Devadevan
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
கொடி உலர்த்தும் ஆடைகளோடும்
வண்ணப் பூந்தொட்டிகளோடும்
ஒளியைத் தவிர
வேறெதையுமே
தேக்கிவிடாத தளத்தோடும்
வானமே தவமெனக் கொண்டிருக்கும்
மொட்டை மாடியின் ஓர் மூலைக்குக்
குடைபிடிக்கிறது மரம்
பலத்த தயக்கத்துடனே.
எவர் தவத்தையும் கலைத்துவிடாமல்
கூர் தீட்டவந்த பணியாளர்களாய்
பறவைகளின் குரல்கள்.
இந்த அதிகாலை வேளையின்
ஆரம்ப ஒலிகளாய்
வலியுணர்த்துவதும்
வழி சுட்டும் சோர்விலா விழிப்பிற்கான
ஆற்றலைப் படைப்பதுமாய்
பறவைகளின் கூட்டொலிகள்!
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
நீர் கசியும் கண்களில் காணப்படுவது
தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும்
கருப்பு அல்லி அல்லவா?
இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
பசுங்கிளைகளில் இருந்ததைவிட
ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட
ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட
அவன் இதயப் புனலிலல்லவா
நெடுங்காலம் வாழ்கின்றன
இந்த மலர்கள்?
தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியுமான அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் என்ற நூலுக்கு எழுதிய வாழ்த்துரை.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தனியாயிருக்கும்போதும்
நிரம்பியிருக்கும்போதும்
காலியாயிருக்கும்போதும்
எப்போதுமே
கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது
தன்னுள்ளிருக்கும்
பொன்இன்மையையே அல்லவா?
கவனி இயற்கையை!
என்றது ஹைக்கூ
பிறகு
கவனி சொற்களானாலும்
என்றது
அதன் பிறகு
எதையானாலும்
கவனி என்றது ஹைக்கூ
கடைசியில்தான் அதற்கே தெரிந்தது
கவனி என்பதுதான்
தான் சொல்ல விரும்பிய
மெய்ச் செயல் என்பதும்
பின்தொடர முடியாததும்
பற்றிக்கொள்ள வேண்டியதுமான
பேராசான் என்பது!
கைபேசி புகைப்படச்
சவுகரியம் கண்டவுடனேதான்
ஒரு காட்சி ஒன்றுதான்
தான் என்ற பொய்மையை
வெட்கத்துடன் அது துறந்துவிட்டதும்!
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
தோட்டப் பணியாளர்களாய் நான்கு பேர்_
ஒருவர்
முதுமையும் சோர்வும் கொண்டவராய்
வேலை செய்யாமல்
இதமாக குளிர்ந்து வீசிய காற்றில்
இளைப்பாறிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எளிய மனிதர்களின் ஒரே ஆறுதல்
இந்த இயற்கை மட்டும்தானே?
அவனைப் பார்த்துவிட்டவர்
“என்ன சார், சாப்பாடு ஆச்சா?” என்றும்
”இன்று பண்டிகை உணவுதானே” என்றும்
நலம் உசாவினார்.
“ஆங். ஆச்சு!” என்றவனுக்கு
அவர் முதுமையும் ஏழ்மையும், சோர்வும்தான்
தாக்கியது.
என்னென்ன துயரங்கள், வலிகள்
மனக்குறைகள் மனிதர்களிடம்!
இவை எல்லாமாலும்
மழுங்கிவிட்ட மனதால்
மனிதர்களையும்தான்
எப்படி நேசிக்க முடியும்?
இந்த இயற்கையையும் பேரன்பையும்தான்
எப்படி முழுமையாய் அனுபவிக்க முடியும்?
அன்பா,
நாம் காணவேண்டியதையும்
கண்டடைய வேண்டியதையும் நோக்கியா
நடந்து கொண்டிருக்கிறோம்?
இவர் கவிதைகளில் மூன்று மிக முக்கிய கவிதைகள் என் உறக்கத்தை களவு கொண்டது என்றே சொல்ல வேண்டும். எதை சந்திப்பில் கேட்கிறோமோ இல்லையோ இந்த மூன்று கவிதைகளை பற்றி அவரிடம் பேச வேண்டும் என்று செல்லும் முன்பே திட்டமிட்டு இருந்தேன்.
முதல் ஒன்று, “புதிய ஏற்பாடு”.. நீலி இதழுக்காக எழுதப்பட்டது. பெண்களுக்கே உரித்தானது தாய்மை, என்றெல்லாம் பிதற்றி கொண்டு இருந்த போதிலும் இந்த உலகையே அன்னையாக்கி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி அவர் கண்ட உலகை நிச்சயமாக பெண்ணான நான் ஒரு நாளும் சிந்தித்தது இல்லை.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
கவிதையை நீங்கள் இங்கே வாசிக்கலாம்...
முழுநிறையுடன் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள்
மரிப்பதில்லை,
முழுநிறையை இந்த உலகம்
அடையாததால்!
மரணத்தை அறிந்தவர்களாததால்
அவர்களுக்கு
துயரமும் அத்தோடிணைந்த
இன்பமும் கிடையாது. வெகுமதியாக
இயற்கையின் ஒத்திசைவுதரும்
முடிவிலாப் பேரின்பமும்
பெருநிறைவும் உண்டு.
முழுநிறைவில்லா அரைகுறை மனிதர்களும்
மரிப்பதில்லை
மரணத்தை அறியாத மூடர்களாதலால்
இன்பத்துடனும் துன்பத்துடனும்
முடிவிலாப் போர்களையும் துயர்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்!
அவருக்கு கடை கண்ணிகளுக்குப் போய்
காய்கறிகள் வாங்க
பழங்கள் வாங்க –
வீட்டு மரத்திலிருந்தும்
பழங்கள் காய்கள் பறிக்க தெரியும்
அடுக்களையில் உறைந்தபடி
சமைக்கத் தெரியும்.
தேநீர் போடத் தெரியும்
முடங்கிக் கிடக்கும் முதியவர்களைப்
பேணத் தெரியும்.
ஆசாரமாய்த் தொழத் தெரியும்
கோயில் செல்லத் தெரியும்
கோலம் போடத் தெரியும்
நல்ல நாட்கள், கிழமைகள்
பண்டிகைகள் என்று
கடவுளையும் நன்கு சமைக்கத் தெரியும்
நீங்கள் எப்படி?
நாம் எப்படி?
நாம் அவரைவிட
வித்தியாசமானவர்களா?
நம் அகம் எப்படி?
“அய்யோ, நேரமாச்சு
ஆத்துல என்ன தேடுவா” என
வேகமாக எழுந்துகொண்ட தீபா
அறிவாரோ
தான் விட்டு எழுந்துவிட்ட இடத்தை?
நாம் அறிவோமோ
நம் அகத்துக்கு வெளியேயே இருந்துகொண்டு
எப்போதும் நம்மைத் தொட்டுத் தழுவியே
அழைத்துக்கொண்டேயிருக்கும் அம்ருத மாருதத்தை?
அமைதியாக நாம் அமரும் வேளையில், நம் உடலின் ஒரு கை மற்றொரு கையையும் காலையும் தடவுவதில் உள்ள உறுப்புகளின் நேசிப்பும் அதில் மறைந்துள்ள அன்பையும் கூறி நெகிழ வைத்தார். தொடர்ந்து, நமக்காக பணிபுரியும் மனிதர்கள் எல்லோருமே நம் உடல் உறுப்புகள் போன்றவர்கள் என்பதைக் குறிப்புணர்த்தி, நாம் அந்த மனிதர்களோடு எத்துணை அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் கனிவாகச் சொன்னார்.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புறப்படுமிடம் இறங்குமிடம் உறுதியாகிவிட்ட
புகைவண்டியில் ஏறி அமர்ந்தாயிற்று.
உண்பது அருந்துவது முதலான
எந்தச் செயல்களிலும்தான்
எத்துணை நிதானம்!
சுற்றியுள்ள உடன் பயணிகளிடமும்தான்
எத்துணை இணக்கம்! தொடர்ந்தால்
நிகழற்கரிய பரிவும், புதிய உலகும்
நிகழ்ந்துவிடும் போலல்லவா தெரிகிறது?
மணம் மிக்க சிவப்பு மலர்_
முகர்ந்தபடி, முகரத்தந்தபடி
பறைந்தார் நண்பர்:
“பெருங்கள்ளி என்பது இதன் பெயர்
இதன் பிறப்பிடம் பிலிப்பைன்ஸ்” என்றார்
அவனுக்கோ
பெயர் மறந்துவிடுகிறது
அதன் பிறப்பிடம் மறந்துவிடுகிறது
இந்த பூமியில் என்பதும்
ஒரு மலர் என்பதும்
போதாதா என்றிருக்கிறது?
அம்மா மடியில் அமர்ந்து கொண்டால்
ஏன் இந்தக் கும்மாளம் வராது?
நானும் ஒரு காலத்தில் இப்படி
என் அம்மா மடியில் இருந்து கொண்டு
துள்ளாட்டம் போட்டவன்தானே?
ஆனால் மானசா
அங்கே அந்தக் கூட்டத்தில்
ஏற்பவர் எல்லோர் மடியிலும்
மார்பிலும் சாய்ந்து கொண்டு
கொண்டாட்டம் போட்டபடி…
ஏதோ சொல்வது போலில்லை?
பெருந்தயைப் பெருவெளிக்கன்றி
வேறு எங்கு போய்ச் சேரும்
சூழ்ந்துவிட்ட மழைக்குள்ளே
வேகமாய் ஊடுறுவிச்
சென்று கொண்டிருக்கும் கார்?
ஓநாய்க் குலத்திடமிருந்து
ஒரு குழந்தை உருவினை வந்தடைந்து
மனிதனை நெருங்கி
அவன் கைபிடித்து
வழிகாட்டிபோல் நடந்துவரும்
இந்தக் காரியம்
யாருடைய செயலாய் இருக்கக் கூடும்?
காலம்?
இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பது?
காலம் அவசியமா?
கண்ட ஒரு கணம் போதாதா?
உதிராத பசிய இலைகளுக்கிடையே
உதிர்ந்தும் உதிராது சிக்கிக் கிடந்த
பொன்இலை ஒன்றைக் கையிலெடுத்துப்
பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.
அதை எங்கே விடுவதென்று அறிந்தவனோ?
அறிய முடியாமையின் உலகிலிருந்து வந்து
அறிந்தவற்றால் துயருற்று
துயர்களைய வந்தவனாய்
இந்தக் காற்றுவெளியிடையே நின்று
க-விதை தூவிக் கொண்டிருப்பவனோ?
எத்துணை துயரத்துடன் நம் கலையரங்குகளில்
வந்தமர்ந்து கொண்டிருக்கிறார், நம் அன்னை!
கண்ணா,
நாம் மரங்களை
வெட்டிக் கொண்டேயிருக்கிறோம்!
காடுகளை அழித்துவிட்டோம்!
முதலில்
நாம் நிறைய மரங்களை வளர்ப்போம்
காடுகளைப் பேணுவோம்
அப்புறம்
போன்சாய்க் கலைகளில் ஈடுபட்டு
நம் அன்னையின் முகத்தில்
புன்னகையைக் காண்போம்!
அழுத்திச் சொல்வதற்கு
ஒன்றுமில்லாதிருந்ததுதான்
அழுத்திக் கொண்டிருந்தது,
நூலக அலமாரியில்
அடுக்கப்பட்டுள்ள
அனைத்துப் புத்தகங்களுமாயிருந்த
அவர் புலமை!
அவர் புகழ்!
கனியின்
பூ மலரும்
ஒரு கணத்தையும்
கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ
இந்த உலகில்?
காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில்
பூக்கவே பூக்காத ஒரு மலர்
பார்வை மின்னலில் அறுந்துவிழும் சங்கிலியால்
கண்டடைந்த பொன்வெளிதானோ
கனியும் மலரும்?
என்ன பிழை இது?
இனி எப்போதும்
கவனமாக இருக்க வேண்டும் என்பதை
உணர்த்திக்கொண்டே இருக்கிறது
கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க
எடுக்கப்பட்டுவிட்ட புகைப்படம்?
துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.
அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி
இத்துணை உக்கிரமாய்
அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்?
நிலைகுலைய வைக்கவில்லையா
செயல்களனைத்தையும் சாதிக்கக்கூடிய
எத்துணை பெரிய அற்புத இசையையும்
சுத்தமாகத் தகர்த்துவிடும்
பின்னால் ஓடத் துவங்கும் நம் சிந்தனைகள்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
ஆழமற்றதும் ஆபத்தானதும்
தந்திரங்களாலானதுமான
பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு
என்பவற்றால்
அன்பு எனும் பெயராலே
காலம் காலமாக
நம்மையும் உலகையும்
ஏமாற்றிக் கொண்டேயிருப்பவர்கள்தாமே, நாம்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
புண்பட்ட கோணல் மனிதர்களால்
உருவானதல்லவா
போரும் குழப்பமும் வலிகளுமான
இந்த உலகம்?
ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மனிதனைக்கூட காண முடியவில்லை
என்ற மனிதன்
தனக்குள்ளாவது
ஒரு மரத்தையோ மனிதனையோ
கண்டிருக்க மாட்டானா?
தன் துயர் என்பதே இல்லாதிருந்ததால்தானே
அன்புடையவனாயிருந்தான் அவன்?
தன் துயர் அல்ல
துயர்மலி உலகின்
பெருந்துயர்தானே
பரிவு என்றும் பேரன்பு என்றும்
அவனிடம் இருந்தது?
நான் நான் நான் எனும்
நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே
போர்களும் குழப்பங்களும் வலிகளும்?
இந்த உலகத் துயரங்களே
நம்முடைய துயரங்கள் எனும்
மானுடத் துயரங்களாகும்போதுதானே
பிறக்கின்றன
அன்பு, பரிவு, பேரன்பு, கடவுளின் ராஜ்ஜியம்
என்பதெல்லாம்?
நம்முடைய துயருக்கும்
மானுடத் துயருக்குமிடையே
மின்னற் பொழுதுதானே தூரம்?
அனைத்து வாழ்வுகளும் மகத்தானவை. அதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருந்தால் போதும்
அறியாமை மற்றும்
அறிய முடியாமையையும்
அறிதல்தானே
அறிகிறது?
அறிவாகி
தன்பெயரையே கெடுக்கிறதையும்
அனைத்து துயர்களுக்கும்
பெருந் தீமைகளுக்கும்
காரணமாகிவிடுகிறதையும்
அவன் (அறிவு) வேறு
இவன் (அறிதல்) வேறு என்பதையும்
அறிதல் தானே அறிகிறது?
எவ்வளவுதான் பெரியவனானாலும்
அவனை, தனக்குரிய இடத்தை விட்டு
எங்கும் நகராதபடி கட்டிப்போட்டுவிட்டு
அவனோடு நாம் எவ்வளவு எச்சரிக்கையோடு
இருக்க வேண்டும் என்பதை
அறிதல்தானே சுட்டுகிறது?
நம்பிக்கை, நம்பிக்கையின்மை
இரண்டுமே அறிவாகி
முடமாகி விட்டிருக்கிற உலகில்
அறிதல்தானே எதுவாகவும் மாறாத
ஆற்றலாக இருக்கிறது?
அனைத்து துயர் இருளையும்
விரட்டியடித்துவிடத்தக்க
ஒளியாக இருக்கிறது?
அறிதல்தானே
பார்க்கவும் கேட்கவும் கவனிக்கவும் சொல்கிற
வழிகாட்டியாக இருக்கிறது?
மனிதனல்ல,
எந்த மனிதனுமில்லாத
ஆளுமைப் பண்புகள் என்றேதுமில்லாத
அறிதல்தானே மகாஞானியாக-
பேராளுமையாக இருக்கிறது?
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
நிறுவ வேண்டுமல்லவா?
”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம்
கவிதைதான்” என்றபடி போஸ் கொடுக்க
ஒரு கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தினோம்.
“கடை விரித்தோம், கொள்வாரில்லை”
என்று சொல்ல
நாம் ஒன்றும் பழைய வள்ளலாரில்லையே
பார்த்துவிடலாம் ஒரு கை!
காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?
அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?
மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?
மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?
நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?
மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?
கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது. கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டு, ரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும், பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.
.
அடைய வேண்டிய இடத்தையும்
தன்னுடைய வீட்டையும்
பேரமைதி மிளிரும்
நிதானமான நடையையும்
கண்டு கொண்ட பேருயிர் !
தான் கண்டுகொண்டதிலேயே
மாட்டிக் கொண்ட சிற்றுயிர் !
ஒன்றுதான் அது
உள்ளதுதான் அது
ஆனால் அது
செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே
கடவுளாக இருக்கிறது?
தன்னை மய்யம் கொண்ட
எந்தச் செயலிலும் இல்லாதது
ஒன்றிலிருந்தும்
உள்ளதிலிருந்தும்
ஊற்றெடுத்து வருகிறது.
நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து, எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார். தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின், கவிதையின் தீவிரத்தை உணர்த்தியது. நான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்தது, உணர்த்த முனைந்தது– பேரன்பு, கருணை, களங்கமின்மை, உறுதி, காதல், காலமும் இடமும் இலாத நிகழ்தல், இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.
அடைய வேண்டிய இடம்
என்று ஒன்றுண்டா?
இங்கே வந்துவிடுங்கள்
இங்கே வந்துவிடுங்கள்
என்று சொல்வதற்கு என்று
ஓர் இடம் கிடையாது
ஆனால்
இதை விட்டுவிடுங்கள்
இதை விட்டுவிடுங்கள்
என்று சொல்வதற்கோ
ஒவ்வொரு நொடியும்
ஒரு முந்தைய நொடி உள்ளது.
நாம் விட்டு விடுதலையாகி
நிற்கும் போதெல்லாம்
அடைய வேண்டிய இடத்திற்குத்தான்
வந்து சேர்ந்துவிடுகிறோம்.
அது ஒரு இடம்கூட அல்ல
நாம் தான் அது
இந்த பேரண்டம் !
எந்த ஒரு சொல்லிலும்
சிக்கிக் கொள்ளாது
ஒளிரும் பேருண்மை!
அல்லது
ஒளி மற்றும் பேருண்மை!
எதுவானாலும் சரி
அது சொல்லப்படுமபோது அல்ல
விட்டு விடுதலையாகி
ஒரு பொருளாகவோ செயலாகவோ
இருக்கும்போதுதான் அது உண்மை.
இப்போது "நாம்தான் அது" என்ற சொல்லை
எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறோம்?
மானுடத் துயர் கலக்காத
எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப்
பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது
வானளாவிய பெருமரத்தின்
உச்சாணிக் கிளையில்
வந்தமர்ந்து கொண்டிருந்தது?
பெயரும் உருவமுமில்லாத ஒன்றின்
சிறியதொரு பெயரும் உருவமும்?
மோனப் பெருவெளியின் ஒரு பிஞ்சுக்
குரல் சொல் உரு.
ஒரு சொல்லால் அனைத்தையும்
உபதேசித்து விட முடியுமா?
அங்கிருந்து- அசையாமல்
அது நின்று கொண்டிருந்தது-
நகர்ந்தது. அபூர்வமாய்!
வானில் சிறகடிக்கும் ஒரு பறத்தல்
உபதேசமும் உபதேசப் பெருக்கமுமான
வியர்த்தம்தானா?
தானே இல்லாதபோது தான் எப்படி
அதை உபதேசித்திருக்க முடியும்?
ஒரு சொல்தானே பறந்து கொண்டிருந்தது
அதில் எங்கே இருக்கிறது உபதேசம்?
ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க முடியும் உண்மைக்கு
பிறருடைய இடம் எங்கிருக்கிறது ?
கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை
இந்த பூ மரத்திடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
காற்றின் தீண்டலில், பூத்துப் பூத்துக்
காணுமிடத்தையெல்லாம்
முத்தமிட்டுக் களிக்கும் இந்த மரம்
இந்த வான்மீன்களிடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
பேரொளிரும் ஆனந்தப்
பெருவெளியிடமிருந்துதானே
கற்றிருக்க வேண்டும்
இந்த வான்மீன்களும்?
கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை!
பயணம் முடிந்து
வீடு வந்து சேர்ந்த
இரண்டு நாட்களாய்க் காய்ச்சல்.
வாட்ஸ்அப்பில் யாரும்
அச்சச்சோ காட்டவில்லையே
எனக் கவலை தெரிவித்ததற்கு
“சார், நீங்கள்
கவிதையல்லவா அனுப்பியதாக
எண்ணினோம்” என்கிறார்கள்!
மென்மையான சூட்டில்
யாரோ அவனை
வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மானுடப் பசியாற்றும்
அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே?
சாலச் சமைந்த அப்பம் போலும்
சுட்ட கிழங்கு போலும்
நனி கனிந்த பழம் போலும்
அவர், எத்துணை அழகாய்_
துக்கத்தையும்
துக்க நீக்கத்தையும் கண்டுகொண்ட
தேவதை போலத்தானே காணப்படுகிறார்;
அமைதி கொள்வதற்கன்றி
கவலை கொள்வதற்கோ
களி கொல்வதற்கோ
என்ன இருக்கிறது?
அவன் வாணாளில்
தீவிரமான நோய்கள் வந்தபோது
இருந்திருக்கலாம்.
எண்ணங்கள் கைவிட்டுவிடும்
இளம்பருவத்தில்
அவன் அதை அனுபவித்திருக்கலாம்,
ஞாபகமே இல்லை என்றாலும்
வாடும் முகங்கள் மூலம் அதனை
கேள்விப்பட்டிருக்கத்தானே செய்கிறான்?
இன்று இந்த 78ம் வயதின் பயணத்தில்தான்
அவன் அந்த விருந்தாளியைச் சந்திக்கிறான்
ஆண்களானால் தங்கள் காதலியையும்
பெண்களானால் தங்கள் காதலனையும்
கடவுளானால் கடவுளிடமே இளைப்பாறும்
கடவுளின் துயரையும் கண்டதுபோல்
அப்படி ஒரு நெருக்கமான உறவும்
உறவின் இன்பமும் தவிர வேறேது?
ஒரு கணம்தானா
நாம் அதிசயித்து நின்ற நேரம்?
மின்னலை விளக்காக்கிக் கொள்ளத்
தெரியாத பேதைகளாய்
மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில்
சுருண்டு கிடப்பதுதானா நம் அவலம்?
கண்ட நாள் முதலாய்
அலையும் ஒளிச்சுடராய்
பூமியெங்கும் சுற்றி,
உலவிக் கொண்டிருக்கிறது காண்
ஒரு வண்ணத்துப்பூச்சி!
இந்த வேற்று வெளியினிலே
புன்னகைக்கும் எல்லோருமே
என்றும் அறிந்தவர்களாகவே
தெரிகிறார்கள்
நெருங்கிவிட்டவர்களாகவே
தெரிகிறார்கள்
இங்கே எதுவாகவும் நாம் ஆகலாம் என்றிருக்க
எதுவாக விரும்புகிறது நம் உள்ளம்?
ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து
பலவாகியதென்றாலும்
அந்த ஒவ்வொன்றிலும்
முதல் ஒன்று இருந்தது.
பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும்
பலப் பல இணைந்து இணைந்து
ஒரு ஒரு விதையாக ஆனவற்றுள்ளும்
அந்த முதல் ஒன்று இருந்தது.
விதை எத்துணை முக்கியமோ
விருட்சம் அத்துணை முக்கியமாக இருந்தது
அத்தோடு
விருட்சம்தான் விதை
விதைதான் விருட்சம் என்பதும்
ஒவ்வொரு இடத்திலும் அந்த முதல் ஒன்று
தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதும்
தெளிவாகவே இருந்தது.
மனிதன்தான் மனித சமூகம்
மனித சமூகம்தான் மனிதன் என்பதையும்
ஒவ்வொரு இடத்திலும்
அந்த முதல் ஒன்று தொடர்ந்து வருகிறது என்பதையும்
சொல்லவும் வேண்டுமா?
ஒரே ஒரு வேறுபாடு
நாம் சொல்லியே ஆக வேண்டும்
மனிதன்தான் உண்மை
மனித சமூகம் என்பது
நம் கற்பனை படைப்பு.
ஒரு இலட்சியம், ஒரு கண்டுபிடிப்பு
முதலில்
ஒரு தனி மனிதனிடம்தானே தோன்றுகிறது?
பல்லாயிரம் உயிர்களிடமிருந்து தோன்றியவன்தான்
ஒரு மனிதன் என்றாலும்
பல்லாயிரம் மனிதர்களிடமிருந்தல்லால்
ஒரு மனிதனிடமிருந்துதானே
ஒவ்வொரு காலமும் ஒரு புதிய கண்டுபிடிப்பு
ஒரு பெருவிழிப்பு தோன்றுகிறது?
என்றாலும் அதற்காக அந்த மனிதன்
புகழுக்குரியவனாவானோ?
ஆன்றமைந்த மனிதனே எனில்
மெய்ம்மை அறிந்தவனே எனில்
அவன் அதை விரும்புவானா?
எல்லாப் புகழும் அவனைத் தோற்றுவித்த
பல்லாயிரம் உயிர்களுக்கும்
அவர்கள் உறவாகி வளரும்
மனித சமூக மனங்களுக்குமல்லவா உரியது?
நாம் செல்ல வேண்டிய இடத்தைச்
சொல்லிவிடவில்லையா,
கண்ணெதிரே
இரட்டைச் சடையுடன் ஒரு மலர்முகம்?
ஒளியை மறந்துவிடுவார்களோ என்று
திகைக்க வைக்கின்றனர்
கொஞ்சநேரம்
நிழல்களோடே
விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!
நடைபாதையின்
சதுர சதுரத் தளக் கற்களுக்கிடையே
ஒரு ஊசி நுனி இடைவெளி கண்டு
உட்புகுந்துவிட்டது ஒரு புல்!
அது வளர்கிறது! வளர்கிறது!
மனிதனின் பாதையில்
கண்டிப்பாய்
அவன் பார்வையை எட்டிவிடும்படியாய்!
கண்மருந்துச் சொட்டுடன்
அய்ந்து நிமிடங்கள் விழிமூடியிருக்க
காலத்தை உங்கள் கையில்
ஒப்படைத்துவிட்டல்லவா
அவன் தன் அன்பனுடன்
மூழ்கிவிடுகிறான்?
பிரதி உபகாரக்
காதல் வெளிப்பாடாய்
காலத்தோடும் அவனுக்குக்
கடமைகளிருக்கிறதல்லவா?
காதல் எனும் செயல்வடிவம் கொண்டதோ
காற்று?
உபவன மாஞ்சோலைக்குள்
ஒரு காற்று
பெருங்கூட்டமாக
குழுக்களாக
தனித்தனியாக
பிரிவிலாத ஒன்றின்
பேருயிராக
பேருரையாக.
இவையெல்லாம் சொற்கள்
மானுட உளறல்கள்
சமயங்களில்
ஆபத்தானவைகளும்கூட
சொற்களைத் தவிர
நம்மிடம் வேறொன்றுமில்லையா
செயல்கள்? பொருள்கள்?
நம் செயல்களுக்கும் பொருள்களுக்கும் மட்டுமே
உரித்தானது என்பதைக் காட்டுவதற்குத்தானா
நம்முடைய எந்தப் பிடிக்குள்ளும்
அகப்படாமல் போய்க்கொண்டே இருக்கிறது
காற்று?
இந்தக் காற்று வெளியிடையே அல்லவா
காதலையும் காதலின் இரகசியங்கள்
அத்தனையையும் அவன் அறிந்து கொண்டான்!
எப்போதும் சிலிர்சிலிர்க்கும்
பெருங்களியுடனும்
எப்போதாவதுதான்
அசையாத மவுனத்துடனும்
வாழ்கின்றன இந்த மரஞ்செடிகொடிகள்!
வருடிச் செல்லும் காற்று
சொல்லிச் சென்ற பேருண்மையை
எத்தனை முறைகள் அவனும் அதனைப் போலவே
சொல்லிக்கொண்டேயிருக்கிறான்!
வான்வெளியில் பேரொளிரும் ஒரு பொருளைப் பற்றி
எங்கும் விரிந்துகிடக்கும் ஒளியைப் பற்றி
இரு மண் துகள்களுக்கிடையிலும்
நின்று துலங்கும் சூரியனையும்பற்றி
எத்தனை முறைகள் அவனும்தான்
சொல்லிக் கொண்டே இருக்கிறான்?
முழு ஆற்றலுடன்
தனக்குத் தன்னையே
பின் உந்தமாக வைத்துக்கொண்டு
ஒரு சிறு
தூண்டலுக்காகக் காத்திருக்கிறது
மெழுகுவர்த்தி!
அடிக்கடி
அந்தரத்தில் நின்றே
(என்னஅஅ அழுத்தமாய்ச்)
சிறகடிக்கிறது தும்பி!
ஏன்?
என் வாசகர்களுக்கு
நான் சொல்ல வேண்டியதே இல்லை
என்கிறது அது!
எப்போதும்
அமைதியும் ஆழ்ந்த யோசனையுமாய்
இருப்பது போல் தோன்றிய
அவனை நோக்கி
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
என்றார் துணைவியார்
எத்துணை பெரிய தேவவாக்கு! அக்கறை!
ஆங், அது எனது மரணமல்லவா என
அலறிக்கொண்டு முழித்தது மூளை!
ஆங், அப்போதுதானே நான் வருவேன் எனக்
களி கொண்டு குதித்தது வாழ்க்கை!
‘இரண்டுபேரும் (ஒற்றுமையாய்)
சற்று அமைதியாயிருக்க மாட்டீர்களா’
என்று அதட்டியது பெரிசு!
அவன் நடை உலாவும் உபவனத்தில்
அன்று பூமியின் பச்சைக்குடம்
பாலமுதாய் நிறைந்து
பொங்கி வழிந்தோடுவது போல
சிலந்தி அல்லிச் செடிகளின்
வெண்மலர் வரிசை…
பெருவெளியெங்கும்
ததும்பி அலையடிக்கிறது
பேரமைதி கொந்தளிக்கும்
அதன் ஆட்டமும் பாட்டமும்
யாருடையவோ இதயத்தை
எதிரொலிப்பதுபோல!
அறிமுகமற்ற மனிதர்களானாலும்
ஒரே வழியில் எதிர்ப்பட்டவர்களாய்
புன்னகைத்துக் கொள்ளும்
மனிதர்களில் ஒருவர்
அன்று புதிதாய் வாய்மலர்ந்து
காலநிலையையும்
காற்றையும் வெளியையும் புகழ்கிறார்.
சொல்லமுடியாத ஒன்றை
மொத்த உலகிடமும்
பகிர்ந்து முடித்துவிட்டவர்கள் போலும்
இத்தகையதோர் பெருநிலைதான்
பொங்கிவழிந்து
நிறை பெருகிக் கொண்டிருக்கிறதைக்
கண்டு கொண்டவர்கள் போலும்…
அவன் உன்னை நெருங்கியபோது
அவன் மூச்சு உட்கொண்ட உன் நறுமணம்
இந்த மொத்த உலகையும் நேசித்த
மலர்களிடமிருந்து நீ பெற்றுக்கொண்டதாலோ
பிற பொழுதெல்லாம் அவன் உடலும் உயிரும்
இம் மொத்த உலகையும்
நேசிப்பதாய் மாறிவிட்டுள்ளது?
இக் கவிதையினை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பனே,
வேகத் தொற்று ஒன்றால்
நாம் இந்த உலகை மாற்றிக் கொண்டிருப்பதைப்
பாராய்!
எவ்வளவு உயரமானாலும்
மேலேயும் கீழேயும்
ஏறி இறங்கும் மின் ஏணிகள்
மனிதர்களை நசுக்கிவிடாததும்
வழிவிடுவதுமான
நுண் உணர்வுக் கருவிகள்
உறுதியான பாதுகாப்பு முறைகள்
ஒழுங்கினையே உயிர்மூச்சாய்க் கொண்ட
இன்னும் எத்தனை எத்தனை பணி இயந்திரங்கள்!
கண்டுகொள்ள முடியாதது எதுவுமில்லை எனும்
கண்காணிப்புக் காமிராக்கள்
கடவுளின் விழிகளென செயற்கைக் கோள்கள்
இத்தனைக்குப் பிறகும்
வறுமையில்லாத
அறமின்மையில்லாத
துயரில்லாத
அழகான
உலகைப் படைக்க முடியாது
தடுத்துக் கொண்டிருப்பது எது?
அந்த இடத்தில்
பேரமைதியோ பெருங்களியோ
ஒளிர்வதே இல்லை.
(ஆ, இதைக் கண்டுகொண்டாலே போதுமே
பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை
நாமே கண்டு இயற்றி விடலாமே?)
யாராவது எதையாவது கேட்டு
தான் மக்கு என்பதையும் முட்டாள் என்பதையும்
கண்டுபிடித்துவிடுவார்களே என்றுதானே
அந்த இடம் தன்னை
தீராத நோயாளியாய் மாற்றிக் கொண்டிருக்கிறது?
நம்மை மக்காக முட்டாளாக நோயாளியாக
மழுங்கடித்திருப்பது எது?
ஆ, இதைக் கண்டுகொண்டால் போதுமே
பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை
நாம் கண்டு இயற்றி விடலாமே!
நாமற்ற நாமால்!
மனம் பறிகொடுத்த
வியப்புக் களியுடன்தான்
அவன் அந்தப்
புதிய பென்சிலைப் பார்த்தான்
ஒரு நுனியில் எழுதும் கரி
மறு நுனியில்
தவறு நேர்கையில் அதை அழிக்கத்
தயாராய் இருக்கும் அழிப்பான் துண்டு
எழுதக் குவிகையில்
கவனத்தின் உச்சியிலிருக்கிறது அழிப்பான்
கண்ட பிழையை அழிக்கக் குவிகையில்
அதன் உச்சியிலிருக்கிறது
அணையாத தயார்க் கனலுடன் எழுதுகரி
செயல்கள் எல்லாம் செயல்களல்ல
பொழுதுபோக்கும் கலைகளிலிருந்தல்ல,
காலத்தை நிறுத்திக் காட்டும்
கவிதைகளிலிருந்தே
செயல்கள் பிறக்கின்றன.
செயல்கள் என்றால் என்ன?
கவிதை என்றால் என்ன?
அன்பு என்றால் என்ன?
அழகு என்றால் என்ன?
உண்மை என்றால் என்ன?
யாராலும் சொல்லித்தர முடியாதது
ஒருவன் தானே அறிந்துகொள்ள வேண்டியது
தானே அறிந்துகொள்ளாதவரை
தன்னில் பொய் சூடிக்கொள்வது
ஒரு பழம்
பதினெட்டு துண்டுகளாய்
ஒரு தட்டில்!
பதினெட்டு துண்டுகளும்
ஒரு முழுப் பழமாவதற்கு துடிதுடித்ததில்
ஒவ்வொரு துண்டும்
ஒரு முழுப்பழமாகிவிட்டது!
அவர்களிடம்தான் இப்போது
எத்துணை கனிவு!
எத்துணை இனிப்பு!
எத்துணை அழகு!
எத்துணை நிறைவு!
ஆண்கள் வெளிப்படையாகவே
அதை வைத்திருக்கிறார்கள்
பெண்கள் அந்த மீசையையும் தாடியையும்
தங்கள் உள்ளே மறைத்து வைத்திருக்கிறார்கள்
அந்தப் பூங்காவின் மரநிழல் பெஞ்சில்
ஓர் இணையர்.
அவர்கள் நடுவே
கண்ணுக்குத் தெரியாத உருவினனாய்
ஓர் அறிஞன் வந்தமர்ந்துகொண்டு
குறுக்கே குறுக்கே பேசத் தொடங்கினான்
முதலில் நீ இங்கிருந்து போடா வெளியே
என்று அடித்து விரட்டத் தொடங்கினார்
கோபம் கொண்ட அந்தப் பெண்மணி!
ரோஜா மலர்களுக்கு
உரமேற்றுகின்றன
கருப்பு முத்துக்களான
ஆட்டுப் புழுக்கைகள்_
அன்பே,
இந்தக் கவிதைகள் உனக்கு
உரமேற்றாதா?
வெறுப்பும் கசப்புமிக்க மனிதர்களால்
பீநாறி என்றும்
அன்பும் அழகுணர்வுமிக்க மனிதர்களால்
நித்திய கல்யாணி என்றும்
நயன்தாரா என்றும்
பக்திகொண்ட மனிதர்களால்
பூஜைப் பொருளாகவும்
அறிவியல் ஆய்வாளர்களால்
மருத்துவப் பொருளாகவும்
பார்க்கப்படுகிறது
மனிதர்களின் உணர்வுகளை அறிந்ததும்
எதற்குமே சடைக்காததும் மயங்காததுமான
பேராளுமைத் திடம்கொண்ட ஒரு மலர்.
கண்ணாடியுள்ளிருந்துகொண்டு
ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
எண்ணிறந்த பிம்பங்கள்.
உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றிலும்
நான் நான் என்றே
துடிக்கும் பிம்பங்கள்.
கண்ணாடி மறைந்துவிடும்படி
தனை அறிந்த மனிதவெளியில்தான்
பிறக்கிறது
தானற்றதொரு பெருவெளி
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்!
காலமும் இடமும்
பத்தரை மணி தூரம் என்கிறது
இரண்டரை மணி தூரம் என்கிறது
அய்ந்து மணி தூரம் என்கிறது
நான்கு மணி தூரம் என்கிறது
கைபேசியோ
மின்னற் பொழுதே(தூரம்) என்கிறது
அதனால்தானோ
கைபேசியுடன் பேசிக் கொண்டு செல்லும்
சில மனிதர்களிடம் இத்துணை மலர்ச்சி!
அருட்பெருஞ்சோதித் தனிப் பெருங்கருணையின்
செயல் முறைப் பாடமாய்
மானுட உள்ளமும் இணைந்து விட்டது!
பார்வையில் விரியும்
பெருங்களமெங்கும்
மலர்ந்துவிட்டன காண்
தானியங்கிச் சாலைகள்!
மலை உச்சியிலே
ஒரு கிராமம் நிலவ முடியும்போது
வான் உச்சியிலே
ஒரு மாடம் நிலவ முடியும்போது
மலை உயர ஒரு கட்டடத்திலேயே
ஆயிரம் இல்லங்கள்
அமைதியாக வாழமுடியும்போது
நம் உதிரத்திலேயே ஒரு பறவை
கூடு கட்ட முடியும்போது
ஏன் முடியாது அன்பா
இப் பூவுலகிலேயே கடவுளின் ராஜ்ஜியம்?
மலை உச்சியிலே
வேறு வேறு மதங்கள் கொண்ட
வேறு வேறு கோயில்களின்
வேறு வேறு துதிப்பாடல்கள்!
இந்தப் பாடல்கள் எல்லாமே
மலை கண்டுகொண்ட
மவுனத்திலிருந்து வந்ததென்றால்
இந்தப் போரும் குழப்பங்களும் இவ்வுலகில்
இருக்குமா மக்களே?
பாடுவது எது?
ஓடும் நதியா
கூழாங் கற்களா
வளியா வானமா
யாருமில்லாத வெளியில்
யார்தான் பாடுகிறார்கள்?
யார்தான் கேட்கிறார்கள்?
ஒத்திசைவுதான் பாடுகிறது!
ஒத்திசைவுதான் கேட்கிறது!
நானற்ற இழைகளால் நெய்யப்பட்ட
குண்டு துளைக்காத ஆடைகளை
நீ அணிந்து கொண்டால் போதுமா?
பகையையும் பாதுகாப்பையும்
பயத்தையும் வெறுப்பையும்
போர்களையும் துயர்களையும்
அவற்றின் ஊற்றுக் கண்ணையும்
அதைக் கண்டு கொள்வதால் மூடி
அங்கேயே திறந்து கொள்ளும்
பேரன்பின் ஊற்றையும்
அது தரும் குண்டு துளைக்காத ஆடையையும்
உரைக்க வேண்டாமா
உன் வாழ்வும் சொற்களும்?
சுயம்வரமா நடந்துகொண்டிருக்கிறது?
பேருக்கும் புகழுக்குமா இப்படி…?
தனக்கு இல்லாவிட்டாலும்
தனது சாதிக்காரனுக்கு என்று,
மானுட இயல்புதானே இது என்று
காலம் காலமாய்
மக்கு மனிதர்களாகிக் கொண்டு
கொலை பாதகங்களைப்
புரிந்து கொண்டிருக்கிறார்கள்
இங்கிருந்துதான் அனைத்து தீமைகளும்
அழியாது விளைந்து கொண்டிருக்கின்றன
என்பதறியாமல்?
பசியும் பட்டினியும்
பயங்கரமாய்க் கொந்தளிக்கும்
பஞ்சம்.
ஒரு விநியோகத்தின் முன்னால்
கூட்டமாய் இடித்துக் கொண்டு
எனக்கு, எனக்கு, என் உறவினர்களுக்கு எனக்
கொதித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்,
கண் இமை நுனிகளிலேயே கொலைவாட்களை
ஒளித்து வைத்திருப்பவர்கள்
கருணை தரும் களிப்பின் இரகசியமறியாதவர்களாய்
குமைந்து கொண்டேயிருப்பவர்கள்
உலகம் ஒரு குடும்பம் என்பதை
ஒரு நாளும் கண்டறியாத அறிவிலிகள்!
சத்தியத்தைச் சிலுவையிலறைந்துவிட்ட பாவிகள்!
பிதாவே இவர்களை மன்னியுங்கள்
அச்சத்தினாலே
இவர்கள் தாங்கள் செய்வது
இன்னதென அறியாதிருக்கிறார்கள்!
பெங்களூருவிலிருந்து த்ரிஷா
மும்பைக்குப் போகும்படியாயிற்று
இடைக்கிடைக்கு பெங்களூருவுக்கும்
வந்து போகிறார்
பெங்களூருவில் இருக்கையில்
குறிப்பாக எங்கள் அபார்ட்மெண்ட்
மக்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொள்கையில்
அவர் வாழ்ந்த அஸ்ஸாம் பீகார்
மக்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்
அப்போது
பெருநகர சிறுநகர வாழ்க்கை குறித்து
நாங்கள் சற்று அலசியுமிருக்கிறோம்
இப்போது மும்பை.
பெங்களூரு இந்திய மக்களெல்லாம்
கூடிய இடமென்றால்
மும்பை உலக மக்களெல்லாம் கூடிய இடம்
என்பதை உணர்த்துமாறு
நிறைய பேசிக்கொண்டே இருந்தார்
அந்த எல்லாப் பேச்சுக்களையும் தாண்டி
அவன் உள்ளத்தை நிறைத்ததும்
நினைவிலிருக்கும் ஒன்றே ஒன்றானதும்
அவர் சொன்ன ஒரே வாக்கியம்தான்:
“They are very kind”
அற்புதமான அவனது எந்த அனுபவங்களும்
இடத்தாலும் காலத்தாலும்
நிகழ்ந்தவையாய் இல்லாதபோது
அதை எப்படி
பெங்களூரு நாட்கள் (தூத்துக்குடி நாட்கள்)
என்று சொல்வான், இப் பூமியிலுள்ள
மற்ற எல்லா இடங்களும் காலங்களும் வந்து
கோபித்துக் கொள்ளாதா?
கொஞ்சம் பொறுங்கள்
மேலே உள்ள தலைப்பையும்
அழித்துவிடுகிறேன்!
கிறிஸ்துவச்சியான சோஃபியா
கவிஞரால்
“நீ கவிஞர்களின் புதல்வியல்லவா”
என்றே அடிக்கடி செல்லமாகக்
கொஞ்சப்படுபவள்!
திருநீறும் திலகமுமாய்
அவள் உலவுவதைப் பார்த்து
அதிர்ச்சியும் வியப்புமடைபவர்களைப் பார்த்து
“சும்மா ஒரு அலங்காரம்தான்!” என்பாள்.
கடல்மீது எழுந்து நிற்கும்
காலைக் கதிரவனாய் அல்லவா
ஒளிர்கிறது அவள் நுதல்!
ஒரு கோணமாய்க்
கிடந்தது
பெண் அவர் துயில் உடல்.
ஓர் இணைக் கைகளும்
ஓர் இணைக் கால்களும்
கூடிக் கிடந்த
அன்பின் ஆழமோ
சொல்லில் அடங்காது!
கட்டான உடலுடைய பெண்களைக்
காணும்போதெல்லாம்
தேவதைகளும்
குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம்
குழந்தைகளும்
நினைவுக்கு வருகிறார்களே என்ன?
இந்த பூமியை
நாம் ஒரு கோயில் என உணர்வதற்கு
ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும்
விக்கிரகங்களாக உணர்வதற்கு
தானாக நிகழும் ஒவ்வொரு செயல்களும்தான்
கடவுள் என உணர்வதற்கு
நாம் செய்ய வேண்டியதென்ன?
யாராவது சொல்லிக்கொடுத்து நிகழ்வது செயலாகுமா?
தானாக நிகழ்வதல்லவா செயல் என்பது?
எப்படியோ ஒரு விதை தோன்றி
வந்து விழுந்துவிட்டதுதானே
இப் பேரண்டத்திற்குள் கோள்களாகவும்
பூமியெனும் ஒரு கோளில்
கோடானு கோடி
உயிர்களாயும் தாவரங்களாயும்
மலர்ந்து விட்டன?
மதத்தைத் தேடும் மனிதனுக்கு அவர்கள்
கோடானு கோடி விக்கிரகங்களாய் கடவுள்களாய்க்
குறிப்புணர்த்தாததாலோ (அ) கண்டுகொள்ளப்படாததாலோ
மனிதன் கடவுளையும் விக்கிரகங்களையும்
படைத்துக் கொண்டு
சக உயிர்களையும் தாவரங்களையும்
மறந்து திரிகிறான்?
கோடை ஆரம்பித்து விட்டது
காற்றும் மிக மிக மெல்லியதாகி
வேகங்கொண்டு
வனமெங்கும் வெளியெங்கும்
களைத்து மூச்சு வாங்கிய போதுதான்
ஆங்காங்கே அவ்வப்போது
அமைதியாக உட்கார்ந்திருக்கிறது
யார் இருக்கிறார்கள் இங்கே?
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டங்களும்
அமைதியான இசையும் மட்டும்தானே இருக்கிறது இந்த உலகில் ?
இந்த நெல்லி மரத்தில் கனிகள்
கூட்டாகவா தனித்தனியாகவா
தொங்கிக் கொண்டிருக்கின்றன?
கூட்டாகவும் தனித்தனியாகவும்
என்கின்றன அவை ஒருமித்த குரலில்.
அவர்கள் சொல்வது பிரிவு எனும்
துயர்ப் பொருள் கொண்ட தனிமை அல்ல.
முழுமையாய் அமைந்து
முழுமையைப் பரப்பத் துணிந்த தனிமை!
அவைகளை உதிர்த்து
ஒரு மூட்டையில் கட்டினார் தோட்டக்காரர்
அப்போதும் கூட்டாகவும் தனித்தனியாகவும்தான்
இருக்கிறோம் என்றனர்!
மூட்டையை அவிழ்த்து
தரையில் கவிழ்க்கவும்
சிதறி ஓடப் பார்த்தன சில கனிகள்
மேலே மேலே விழுந்து மோதி
கூடிக் கொள்ளவே பார்த்தன சில கனிகள்.
மொத்தத்தில் அப்போதும்
கூட்டாகவும் தனித்தனியாகவுமே இருந்தனர்
பிரிவு எனும் அவலத்தனிமை கொண்டவர்களாயல்ல.
(மரணமற்ற பெருவாழ்வைக் கொண்ட)
கனிகள் அல்லவா?
மனிதன் துவைத்து உடுக்கவேண்டிய
ஆடைகளை
சூடான இரும்புப் பெட்டி கொண்டு
அழுந்தத் தேய்த்து முடித்து
ஒழுங்கு கூட்டி
அவன் அடுக்கி அடுக்கி வைப்பதற்கு
எவ்வளவு கனல் வேண்டும் என்பது
அவன் அறியாததா?
பொட்டுத் தீ கனலும் பீடி கொண்டே
தன் உடலைப் பேணிக் கொள்கிறான் அவன்.
பயில்வானுடையது போலிருக்கும்
ஒரு புஜம் தவிர்த்து அத்தனை உறுப்புகளும்
ஒரு குச்சிப் பூச்சியினுடையது போலிருக்கின்றன
இவன் ஆற்றல்களையெல்லாம் உறிஞ்சிவிட்டது
இந்த உழைப்பு மட்டும்தானா?
இவனது பிற நாட்டங்களையெல்லாம்
கவனித்திருக்கிறீர்களா?
இரண்டு நண்பர்கள்
பிரிய மனமின்றியே
சண்டை போட்டுக் கொண்டு
எவ்வளவு காலமாய்
இப்படியே
பிடிவிடாமலும் நிற்பார்கள்?
பின்புறத் தோளில் நீளமாய்
காற்றோடு கொஞ்சி உரையாடியபடியே வரும்
முந்தானையை அல்லது துப்பட்டாவை
முகத்திற்கு வெகு அண்மையிலிருந்தும்
கண்டுகொள்ளாமல்
தன்பாட்டில் ஆடிக்கொண்டிருக்கும்
மயிர்க்கற்றைகளை
ஒரு எண்ணம் தோன்றும்போதெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்.
அதே போலத்தான் அவர் இவனோடு
பேச நேர்கையிலெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்
இன்னும் எத்தனை எத்தனை அழகினர் அவரிடம்
எத்துணை அழகும் அமைதியும்
சுடர்மதிக் கவனமும் கொண்ட பேரழகினர்
ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாதவர்களாய்!
அவனிடம் என்ன இருக்கிறது?
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது
அந்தச் சொற்றொடரும் கழன்று விழுந்தபோது
திகம்பரர்கள் என்று
ஆகப் பெரிய ஆடம்பரமான
அம்மணத்தை அணிந்தவர்களாய்
நடந்தவர்களை எண்ணியபோது
அந்த எண்ணமும் சொற்களுமே
கழன்று விழுந்தபோது
அவனிடம் என்ன இருந்தது
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது?
நடைபாதையில் கோயில்வாசல்களில்
பிச்சைக்காரியாய் அமர்ந்துவிட்ட
அந்தப் பெண்ணுக்கு
அன்னை இல்லையா? காதலன் இல்லையா?
எப்போதாவது வந்து சிரிக்கவைக்கும்
கடவுள் போதுமா?
காமவெறியர்களையா தேடிக்கொண்டிருக்கிறாள்?
பிரச்னை உலகைக் கண்டுகொள்ளாமல்
புலனின்பங்களில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்!
எதையாவது யோசித்துக்கொண்டேயிருக்காமல்
நிகழ்காலத்துக்கு வா நிகழ்காலத்துக்கு வா என்று
அழைத்துச் செல்லப்பட்டுதான்
திவ்யா மேடம் திருமணவிழாவிற்கு அவன் வந்து நின்றான்.
நீங்கள் யாராயிருந்தாலும் சரி
எப்போதாவது - ஒரு கணம் –
நீங்கள் இதனைப் பார்க்கத்தானே செய்திருப்பீர்கள்
பற்றி சுடர் இயற்றத் தெரியாதவர்களாயினும்?
பழைய கவிதை புதிய கவிதை எனக் குழம்பாமல்
நித்ய சவுந்தர்யம் கொண்ட வாழ்வை
நித்யஸ்ரீயை
இயற்றுவதையே இலட்சியமாகக் கொண்டவர்கள்தாமே?
அன்னை தன் மகளையோ
ஆண்மகன் தன் காதலியையோ
அவள் தன்னைத் தானோ
இல்லை அழகின்மீதே அழகுதானோ
இப்படித்
தானற்ற வெளிதனிலே
தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது
பார்வையை அடிக்கோடிடுவதுபோல்
கண்களுக்கு மையிட்டுக்கொள்கிறார்கள்
புன்னகையை அடிக்கோடிடுவதுபோல்
இதழ்களுக்கு வண்ணம்…
தாவரங்களை நெருங்குபவர்களாய்
கூந்தலில் மலர்கள்…
தனித்ததொரு நட்சத்ரத்தைக் காட்டுவதும்
யாவும் ஒற்றை ஒற்றைத்
துளிகளால் மட்டுமே
என்பதைக் காட்டுவதுமாய் அமைந்த
மூக்குத்தி…
உதயசூரியனை நெற்றிப்பொட்டாகவும்
வண்ண மலர்களையெல்லாம்
ஒளிரும் நட்சத்திரங்கள் மின்னும் ஆடைகளாகவும்
சூட்டிக் கொள்கிறவர்கள் யார்?
அந்த நெற்றிச் சுட்டியும்
பார்வையும் ஒன்றே போதுமென்றாலும்
பூரண நிறைவடைந்துவிட்ட ஓருடலை
கைவளைகள் கால்கொலுசுகள் காதணிகள் என்று
எண்ணற்ற அணிகளால்
ஆராதிக்கும் வண்ணமாயும்
ஒரு செயல்முறைப் பாடமாயும்
சுட்டும் ஓர் அழகினைத்தானே
அலங்காரம் என்கிறோம்
மகாலட்சுமி என்கிறோம்
இன்று
மானுட இலட்சியம் என்கிறோம்
உள்ளதை அறிபவர்கள்தாமே நாம்?
தொட்டு தடவிச் செல்கிறது காற்று
பற்றற்றான் பற்றினைப்
பற்றிக் கொண்ட பேருயிராய்!
காற்றின் தழுவலில்
நாம் காணும் இன்பமும்
காதலின் இன்பமும்
ஒன்றா?
அதேதான் அதேதான்
எனச் சிரித்தன
காற்றிலும் ஒளியிலும்
குதித்தாடும் மரக்கிளைகள்!
எத்தகைய செல்வத்தால்
இத்துணை இன்பக் கொண்டாட்டங்கள்!
என்பதையறியாத சுகஜீவிகளைப்
பார்த்திருக்கிறீர்களா?
காலமற்ற பொழுதுகளின்
கருணைக் கொடையினால் பூக்கும்
ஏழைகளின் களிப்பினைச் சுட்டி சுட்டி
“நன்றாகத்தானே இருக்கிறார்கள்” என
தப்பித்துவாழும் மனிதர்களைப்
பார்த்திருக்கிறீர்களா?
வறுமையையே
ஊனமாகக் கொண்ட
ஏழ்மையுடன்
கோயில் வாசல்கள்முன்
பிச்சையெடுக்கும் மானுடத்தைப்
பார்த்திருக்கிறீர்களா?
நாம் அறிந்திருக்கிறோமா,
ஆசைகள் அலங்கார அகங்காரச்
சுமைகளில்லாமல்
காற்றையும் வெளியையும் ஒளியையும் மட்டுமே
அளாவும் எளிய உயிருக்குத்தான்
பறவை என்று பெயர் என்பதை?
அத்துணை பிரமாண்டமான
துளி அமிழ்தினை விலக்கி
அத்துணை பிரமாண்டமான
துளி விஷத்தை அருந்துவனோ
மனிதன்?
கண்டுகொண்டபின்னே
காதல் தவிர பிறிதொன்றுண்டோ?
கரடுமுரடான
கவசத்தால் தன் உயிர்க்குருத்தைக்
காத்துக்கொண்டிருக்கும் மரம்
தன்னை வெளிப்படுத்துமிடம்
தனது தளிர் இலைத் துளிரில் அல்லவா?
தன் உயிர்க் குருத்தைப் போலே
அதே சூழலின்மீதும்
கசப்பின்றி வெறுப்பின்றி
கொண்டிருக்கும்
அன்பின் உறவினாலல்லவா?
உன்மீது
ஒரு தூசு உட்காரச் சம்மதிக்குமோ
காதல் உள்ளம்?
தூய்மையாவதற்கா நீராடுகிறோம்?
குளுமையாகவும் அல்லவா?
குளித்து முடித்து நேர்த்தியான ஆடையுடனே
எங்கிருந்து வருகிறதென்றறியாத
ஒரு பெருநிறைப் பெருங்களியுடனே
ஒரு உலா…
உள்ளதையும் விஞ்சியதோர் சுகம்
உலவுகிறதோ இவ்வுலகில்?
அழுக்கு உடலும் நேர்த்தி கலைந்த ஆடைகளும்
ஒருவன் பைத்தியம் என்பதைக் காட்டுவது போல
அடக்கமான ஆடைகள் ஒருவனை
ஆரோக்கியமானவன் என்பதைக் காட்டுவது போல
குறிப்பாக பெண்களின் வண்ணவகை ஆடை அணிகள்
அவர்களின் உளச்சுவையைக் காட்டுகின்றன!
குறிப்பாக எந்த ஒரு ஆணிடமாவது
எளிமை என்ற சொல்லை நாம்
எங்காவது பார்த்திருக்கிறோமா?
அவர்களது ஆடைகளும் பாவனைகளும்
எத்துணை பொய்மையாக இருக்கின்றன!
அறிவு, புகழ், அதிகாரம் என
அவர்கள் தங்கள் உள்ளத்தைப் போர்த்தியிருக்கும்
ஆடம்பரமான ஆடைகளின் ஆபத்தான அழுக்குகள்!
கண்ணுளார் காணமுடியாத ஒன்றுண்டா என்ன?
அவன் தன் பென்சில் எழுத்துக்களை
அழித்து அழித்து எழுதுவதற்காக
ஒரு அழிப்பான் வைத்திருந்தான்.
ஒவ்வொரு அழிப்பிலும்
தன்னையும் அழித்துக் கொண்டு
தன் பிறவியை
நன்கு அறிந்ததாயிருந்தது அது.
அப்படி ஒரு பேரமைதியுடன்!
தனை உணர்ந்த பெருஞானப்
பேரழகுடன்!
மிக மெதுவான
அவன் காலடி ஓசையையும்
மிக அண்மையான
மவுன வெளிகள் எதிரொலிக்கின்றன!
இல்லை, இல்லை
ஏற்று பரப்புகின்றன
மவுன வெளிகள் ஏற்றுப் பரப்புவதையோ
அண்ட வெளியெங்குமுள்ள
வெளிகள் ஏற்று பரவசிக்கின்றன!
காலடி ஓசை என்பது
பூமியுடன் பூமி மைந்தன்
ஆடிய உரையாடலின்
அன்பும் உச்சரிப்பும் அல்லவா?
எத்தனைத்துளி அமிழ்துகளாலும்
முடிவதில்லை
வேர்பிடித்து பரவிவிடும்
துளிவிஷத்தையும் முறித்துவிட!
கவனமும் அக்கறையுமில்லாத
நம் நீர்வெளி உலகில்
தோன்றித் தோன்றி
முழுமை நோக்கியே
விரிந்து கொண்டிருக்கின்றன
நம்முள்ளிருந்து குதித்து
வேர்பிடித்துப் பரவும்
துளி விஷமும் துளி அமுதும்!
திகைத்துப்போய் நிற்கிறோம்
மனிதர்களில்லா நீர்வெளியில்தான்
மனிதர்களாகிய நாம்
பேருலகைப் பார்த்தபடி செயலற்று
நம் குழந்தைப் பொழுதுகள் மட்டுமே
தேவதை மீன்களாய் நீந்திக் களிப்பதை!
கண்டங்கள், கடல்கள், நாடுகள் என
கட்டு இழைகள் பிரிக்கப்பட்டிராத
பரிசுப் பொட்டலம் போலிருக்கிறது பூமி!
இந்த நூலகங்கள் தோன்றியபிறகும்
மனிதர்கள் வெகுவாகக் கூடிவிட்டபிறகும்
பழம் பெருந் தடங்கள் எல்லாம்
பார் சுற்றுலாத் தலங்களாகிவிட்டபிறகும்
மதங்களும் கோயில்களும்
கொள்கைகளும் கோட்பாடுகளும்தான் எதற்கு?
நீ ஆணாயிருந்தால் என்ன
பெண்ணாயிருந்தால் என்ன
தனை அறியும் பார்வையும்
தனைத் துறக்கும் பாதையும் அல்லவா
ஒரே வழியாய் இருக்கிறது?
அந்த நகரில் எவரும் அறியாதபடிக்கு
மர்மமான ஒரு தீவிரவாதக் குழுமம்
தோன்றி அலைந்து கொண்டிருந்தது
எந்த ஒரு திட்டமும் சிந்தனையுமில்லாமலே
(மாறாத இந்த உலகை மாற்றிவிடத்தான்)
எந்த ஒரு மனிதர்களும்
தாங்கள் அப்படி ஒரு குழுமத்தில்
உறுப்பினர்களாயிருக்கிறோம்
என்பதையே உணராதபடி
அந்தக் குழுமம் பெருகிக்கொண்டேயிருந்தது
மெதுவிஷத்தாலும் தீண்டப்பட்டிராத
அந்த மனிதர்கள் எல்லோரும் கூடி
எந்த இடத்திற்கும் சென்று சேராத
ஒரு தானியங்கும் சாலையையும்
எவர் கண்களுக்கும் புலப்படாத
ஒரு பூந்தோட்டத்தையும்
எந்த ஒரு மனிதனையும் காயப்படுத்திவிடாத
(எளிமையும் இரக்கமுடைய)
கவிதை எனும் மொழியையும் ஒலியையும்
படைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஆடையும்தான்
எத்துணை அழகு, பார்த்தீர்களா? என்று
இரண்டு கைகளாலும்
தன் ஆடையை
அகலப் பிடித்து
அபிநயத்து நின்றாள் சுநேகா.
‘இந்தப் பெண்ணும்தான்
எத்துணை அழகு!” என்று
விழிகசிந்து கொண்டு நின்றது
சுற்றி நின்ற மொத்த உலகமும்!
தூத்துக்குடி பொருநை இலக்கியத் திருவிழா - 2025
கவிஞர் தேவதேவன் “பார்வை நடத்தும் பாதை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இங்கு இணைக்கப் பட்டுள்ளது.
”பார்வை நடத்தும் பாதை” காணொளி
எத்துணை கடினமாக
இருக்கிறது தெரியுமா
உன் எழில் சிரிப்பின் ஈர்ப்பினால்
இதழ் முத்தம் விழைவதனின்றும்
அவன் தன்னை மீட்டுக் கொள்வதற்கு?
நீ மலர்களாகவே இருந்திருக்கலாம்.
பெண்ணாக வந்ததுதான்
பெரும் பிழை என்றான் அவன்.
இல்லை நண்பா
நீ ஆணாக இருப்பது தான்
பெரும் பிழை என்றது அவளது பெண்மை.
மலரின் இதழோ
கனிந்துதிர்ந்த இலையோ
பறவையின் இறகோ
தென்னஞ் சிறகோ
அவனையே போலொரு
தனி உயிரோ
முழுமையிலிருந்து பிரிந்து
முழுமையை எழுத வந்து கிடக்கும்
தூரிகையோ கவிதையோ
அவன் இதயமோ
சும்மா பார்த்துவிட்டுக்
கடந்து செல்ல முடியாதபடி
குனிந்து அள்ளி எடுத்து
அணைத்துக் கொள்ளத் துடிக்கிற
காதல் ரகசிய வெளிப்பாடு
மர வீட்டின்
வெளியே ஒரு அணில்
யாருடையவோ இதயம் போல
அடங்காச் சுறுசுறுப்புடன்!
நீண்ட தாழ்வாரத்தின்
நீண்டோடிய பால்கனிக் கைப்பிடியின்
பளபளப்புக் காப்புக்கென சுற்றியிருந்த
பாலித்தீன் சுருள் அறுந்து நீண்டு
காற்றில் நாட்டியமாடிக் கொண்டிருந்தது
அவனை அழைப்பது போலிமிருந்தது
பெரும் களி நடமும் விளிக்குரலும்
சமயங்களில் தீர்ந்து பொய்யாகி
விடுதலை நோக்கி, அவனை நோக்கி
விடுதலைக்காய் அவனை நோக்கி
துடி துடித்துக் கொண்டிருந்தது போலுமிருந்தது
அவன் நெருங்கிச் சென்று
கிள்ளி அகற்றி விடுத்துக்
காற்றில் விட்டான்
அப்போதும் அது தன் களி நடத்துடன்
சுழன்று கொண்டிருந்தது
வெற்று வெளியில் நீந்தித் திரியும்
பெரு வாழ்வினின்றும் மெல்ல மெல்ல
தான் கீழ் நோக்கிச் செல்லுவதறிந்து
வேண்டாம் வேண்டாம் எனத் துடி துடித்தது
எனினும் மண்ணோடு பிறந்த நீ
மண்ணைத் தொட்டு மண்ணுள்
இறங்குவதே சரி அன்பா என்றது
ஒரு குரல் அப்போது
ஒரு காற்று மண்டபத்தில்
கூட்டமாய்ப் பேசி முடித்து
கூட்டமாய் அடங்கின சருகுகள்
விரிவிழிகள் மேலும் விம்ம
இமைக்காது நிற்கிறது வானம்
காற்று வருடிச் செல்லும்
நீர்ப்பரப்பின் அலைகளில்
பெருநிறையுடன் மிதக்கும் சருகுகளைப் பார்த்து!
வளர்ந்த பிள்ளைகள் இரண்டுடன்
விவாகரத்து செய்து கொண்டாயிற்று
அத்துணை பொறுப்புடனும்
துயர் தெரியாமல் வாழவும்
கற்றுக் கொடுக்கவும் வேண்டும் அவர்
தன் குழந்தைகளுக்கு.
”ஏன்? எங்களுக்கும்தான்!” என்பீர்கள்
அவரை நீங்கள் அறிந்திருந்தால்!
நேர்த்தியான ஆடைகளுடன்
ஒப்பனைகளுடன்
அழகுத் தெய்வம் குழந்தைகளுக்கு
அவர்களின் அம்மா!
”ஏன்? எங்களுக்கும்தான்!” என்பீர்கள்
அவரை நீங்கள் சந்திந்திருந்தால்!
நீங்கள் அவரை சந்தித்திருக்க வேண்டும்
உரையாடியிருக்க வேண்டும்
இதோ இப்போது அவர் தங்கள் வளாகத்தின்
உல்லாசவெளியில் ஒரு பெண்மணியோடுதான்
பேசிக்கொண்டிருக்கிறார்.
பேச்சு முதிர்ந்து விடைபெறும் முன்னால்
அந்தப் பெண்மணியானவர்
இவரது அன்பை ஆராதிக்கும் வண்ணமோ
இவரது ஒளிர்முகத்தில் மயங்கியவர் போலோ
அந்தப் பொலிவுக்கும் பொலிவு சேர்க்கும்
வண்ணமாய் அவர் அணிந்திருந்த
ஒரு மிகப் புதுமையான காதணியினை
மிக நெருங்கி தன் விரல்களால் ஏந்தி
ரொம்ப அழகாயிருக்கு என மகிழ்ந்து நிற்கிறார்.
“ஆ! எங்கள் அன்பையும், எங்கள் அன்பையும்,
அவருக்குச் சொல்லுங்கள் அய்யா”
என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?
பூமியின் நிழல் மடிதான்
எத்துணை கனிவு கொண்டுள்ளதாயிருக்கிறது
காற்றின் படிக்கட்டுகளில்
குதித்தாடி நடமிட்டு பாடியபடி
உதிர்ந்து வந்து கொண்டிருக்கிறது
ஒரு சருகு
பனித்துளி சூடிய
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமி முழுமையும் தழுவிக்கொள்ளும்
பச்சைக் கம்பளத்தையும்,
ஒரு மழைத்துளிக்குள்ளிருந்து
பெருகும் வெள்ளத்தையும்,
உனக்கு முன்னேயே பார்த்துவிட்டவர்கள்
எங்கள் பெண்கள் என்றது
ஒரு புள்ளிமூக்குத்தி!
தற்செயலாய் அவர் அவனைத்
திரும்பிப் பார்த்தபோது
மின்விளக்கொளியில்
அவர் முக அழகையும் விஞ்சி
ஒளிர்ந்த குட்டி மூக்குத்தியின்மேல்
ஒரு மீ குட்டி நிலவு
மேடை நடுவே
நின்றுவிட்ட ஒரு நொடி போன்ற
வியப்புடன் நின்றபடி
பாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.
பாடல் தன் பணியூடே
எங்கிருந்து எங்கிருந்து எனத்
தேடி அலைகிறது
தன்னிடம் தோன்றிய காதலினதும்
அதன் தெய்வீகத் தேன் சுவையினதும்
பிறப்பிடத்தைக் காணமுடியாது!
காண வேண்டியதைக் கண்டு
தன்னிரு கைகளாலும் அதனைப்
பத்திரமாய்ப் பற்றிக்கொண்டவர் போன்று
அவர் அந்த ஒலி பெருக்கியுடன்
மூடிய விழிகளுக்குள்
வெகு ஆழம் சென்றுகொண்டேயிருக்கிறார்
சென்று திரும்பியவர்
தனது பேச்சையும் பாடலையும்
கேட்கத் தகுதி பெற்ற ஒருவனை
ஒலிபெருக்கியுடன்
விடாது பற்றிக்கொண்டிருப்பவர்போலும்
திகழ்கிறார்
அந்த யாரோ ஒருவனுடன்தானோ
அவர் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததுதானோ
இந்தப் பாடல் என அது முடிந்தபோது
வந்து அசையாது நின்றிருந்தது
ஒரு மோனப் பெருவெளி
சிறிய
கைத்தட்டற் சிறகொலிகளால்
கலைந்துவிடாத
பேரமைதி
பெற்றுக்கொண்ட ஒவ்வொரு உயிரின்
இதயத்திற்குள்ளும் போய் அமர்ந்துவிட்டதோர்
வேதனை அம்ருதம்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP