அசையும் எந்தப் பொருளைக்…
அசையும் எந்தப் பொருளைக்…
காண்கையிலும்
அவன் மனம்
களி கொண்டாடுவதைச்
சந்தேகிக்கிறாயா?
காற்று உன் உடலைத் தழுவுகையில்
என்ன நடக்கிறது
எண்ணிப் பார்!
Poet Devadevan
அசையும் எந்தப் பொருளைக்…
காண்கையிலும்
அவன் மனம்
களி கொண்டாடுவதைச்
சந்தேகிக்கிறாயா?
காற்று உன் உடலைத் தழுவுகையில்
என்ன நடக்கிறது
எண்ணிப் பார்!
அந்த பணிப்பெண் மூதாட்டி
அய்யா நீங்கள் தெலுங்கா?
என்று விளித்துக் கேட்டார்.
இல்லை, தமிழ் என்றேன்.
இவ்வளவு பேச இயலும் மொழி
போதாத துயரம் பொங்கியுள்ள முகம்
நாம் கற்றே ஆகவேண்டிய மொழி இதுவெனச்
சொல்லும் முகம்!
காகிதத்தில் எழுத அமரும்போதே
அதன் நிழலும் உடன்வந்தே
அமர்ந்து கொள்கிறது.
நிழலையும் சேர்த்தே
அவன் எழுதிக்கொண்டிருப்பதை
அவன் அறியும்போது
அலறி ஓடுகிறது நிழல்
பென்சிலா,
ஒளி அல்லவா
இப்போது எழுதிக் கொண்டிருக்கிறது,
சூரியன் படைக்கும் உலகாய்!
ஞாயிறு விடுமுறையில்
பூங்கொடி IAS
தனது பங்களாவின்
உபவனச் சோலையில்
நேர்கொண்டு நிமிர்ந்த முகமும்
ஆன்றமைந்திருக்க,
நிலம்தொட நெருங்கிய
நீள்நெடுங்கருங்கூந்தலை
நேர்த்தியுடன் விரித்தபடி செல்லும்
நடைஉலா கண்டு
பறவைகளின் தெய்வமோ என
வாய்பிளந்து நின்றன காண்,
ஆங்குள்ள மயில்கள் எல்லாம்!
தேவதேவனின் புதிய கவிதை நூல் ”நிலவில் உதித்த கார்முகில்” முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கலாம்.
முன் வெளியீட்டு விலை - ரூ 350 (தபால் செலவு ரூ 60 தனி)
டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை முன் பதிவுகள் செய்யலாம்.
ஜனவரி முதல் வாரத்தில் நூல் அனுப்பி வைக்கப்படும்
Gpay எண்: 9789878967
தொடர்புக்கு: போன் 8015861730 மற்றும் 9789878967 (Van Gogh Publications)
----------------------------------------------------------------------------
குளிரூட்டப்பட்டு
அடைக்கப்பட்டு
ஊர்ந்து செல்லும்
வண்டிக்கு வெளியே
பிற வாகனங்களும் மக்களும்
சன்னலைத் திறந்தோ, கதவைத் திறந்தோ
பார்த்தாலே
கதறிவிடும் குரலினை அடக்கியவர்களாய்
கைவிடப்பட்ட
துயர்க்கனலுடனே செல்லுவதேன்?
அன்பு அழகு அறம் கொண்டு
வனையப்பட்ட சாலையா இது?
எத்துணை இனிமையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
அவர்கள் வண்டி?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
இக் கவிதை துயர்மலி உலகின் பெருவலி(2023) தொகுப்பில் உள்ளது.
பெருங்களியிலிருந்தோ
பெருந்துயரிலிருந்தோ
பிறப்பதற்கு முன்னால்
மோனக் கருவறையிலிருந்தது
கவிதை
பிறந்த உடன் அதுபடும் துக்கம்
நமக்கானது
இன்பமோ உயிரின் இயல்பானது
இயல்பும் துக்கமும் கொண்டு
அது சுட்டும் பாதைதான்
அது படைத்துவிட்ட மெய்வழிச்சாலை.
காலமற்ற வெளியெங்கும்
நம்மால் உருவாக்கப்படாமலே
உள்ளதுதானே கடவுளின் ராஜ்ஜியம்?
அற்புத இயந்திரங்களால்
நம்மால் உருவாக்கப்படுவதும்
கடவுளின் ராஜ்ஜியமாகவே
ஏன் இருக்கக்கூடாது?
அப்படித்தானே இருக்கவேண்டும்?
நான் இருக்கிறேன்
ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் என்று
மொத்த சொற்களையும்
இரண்டே சொற்களாக்கிவிட்டோம்.
நான் எனும் இந்த உடல்
உழைக்கிறது
தன்னைக் காத்துக்கொள்வதற்கு!
இருப்பதற்கு!
இந்த உலகத் துயரையும்
காரணத்தையும்
நான் என்பதே அது என்பதையும்
அது கண்டுகொண்டது.
மூட்டிக் கனலவைத்த கரிய கல்லில்
தோசை வார்க்கத் தொடங்கினார் யசோதரை
வெந்து அழிந்தது ஒரு பக்க நுண்தளம்
திருப்பிப் போட்டவேளை மறுபக்கத்திலும்...
நடுவிலுள்ள பதமான தோசையையும்தான்
உண்ணுவதற்கு உகந்த எத்துணை
அற்புதமான உணவாக்கியிருந்தார் அவர்!
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
இக் கவிதை மின்னற்பொழுதே தூரம்(1981) தொகுப்பில் உள்ளது.
வம்சி வெளியீடான இரண்டு பெருந்தொகுப்புகளில் முதல் பொருந்தொகுப்பில் உள்ளது.
இந்த இடத்திற்கு அவன்
விரும்பி வரவில்லை
விரும்பாமலும் இல்லை
அவன் பார்க்கும்போது
நடக்கும் செயலையும்
நடக்கப்போகும் செயலையும்
பார்க்க அல்லவா வந்திருக்கிறான்?
இங்கே யாவருக்குமாய் எழும்
பரிவும் அதன் பான்மையும்
யாரோடும் எதனோடும்
சம்பந்தப்படாததால் அல்லவா
மகத்தானதாயும் பேரன்பாயும் உள்ளது?
பாடகி: தீபா
இக் கவிதை நார்சிசஸ் வனம்(1996) தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் என்ற நீண்ட கவிதையிலுள்ள ஒரு பகுதி.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
இதோ கவிதையின் தெய்வம்
தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்!
இசை தொடங்கிவிட்டான்!
அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி
தொடங்கிவிட்டது காண்
ஓர் ஒத்திசைப் பிரம்மாண்டம்! பேரொளி!
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்
தன் கண்கள் எத்துணை அழகு என்பதை
தன்னுணர்ந்த அழகியா அவர்?
கண்களை விரித்து
கடைக்கண்ணால் பார்த்தது எதை?
பார்க்கச் சொல்லியது எதனை?
காண முடியாத கருவி ஒன்றை
கண்டுகொண்ட அருட்செயலா?
கடவுளே, அது உம்மையும்
உம்முள் நிறைந்த தன்னையுமே
என அறியாத பேதமையா அவருடையது?
மன்னியுங்கள் ஆண்டவரே!
அழகு எவ்விதமானாலும்
அது நீரே அல்லவா?
குழந்தைகளின் எந்த விளையாட்டுகளானாலும்
அதற்கு மிக அண்மையில்தானே நீர் இருக்கிறீர்?
அந்த விழிகளின் அழகையும்தான்
நாம் பார்க்கிறோமில்லையா?
நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள
நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும்
போதாதா என்ன?
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்
பிறக்கப் பிறக்க ஒவ்வோரு குழந்தைக்கும்தான் -
ஒரு எண் இட்டு அவர்களை ஒரு தாய் போல்
பேணிக்கொள்ள முடியாதா,
அவர்கள் சாகும்வரை?
இந்த எண்ணைப் பாருங்கள்
எந்த எண்களையும் பாருங்கள்
ஒரு எண்ணோடு ஒரு எண் நெருங்கி
செயல்வளர்ச்சி நோக்கில் போகும் நோக்கமன்றி
இணக்கமற்ற உணர்ச்சிகள் ஏதாவது கொண்டிருக்கிறதா
பாருங்கள்!
333333 – இந்த எண்கள்தாம் ஒற்றுமையாய்
இருக்கின்றனவா?
3685907214 – இந்த எண்கள்?
எந்த எண்களானாலுமே
எப்படி இணங்கி வாழ்கின்றன, பாருங்கள்
ஒரு வயதிற்குள்ளேயே
பேயறைபட்ட முகங்களாகிவிட்ட
குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும்
அச்சம் கொண்ட பெண் விழிகளை
மான் விழிகள் எனவும் –
கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும்
நம் அழகியல்பற்றி
நாம் யோசித்திருக்கிறோமா?
இரண்டுபட்டுக் கிடக்கும்
எல்லாவற்றாலும்
பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும்
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவே
தராசுமுள் நுனிக்கூடா மய்யத்தின் –
பூஜ்யத்தின் –
பேருலகினின்றும் பிறக்கும் செயல்கள்
தானில்லாமல் தானாகவே
அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றனவா
இவ்வுலகில்,
இயற்கையான ஒத்துழைப்பு எனும்
சின்னஞ்சிறு முயற்சிகளை மட்டுமே பற்றிக்கொண்டு?
எல்லாத் தடைகளையும்
வீணாற்றல்களாகும் குப்பைகளையும்
கண்டு தாண்டி
நாம் வந்துவிட்டோமா, இந்த உலகிற்கு?
நகர் நுழை வாயிலிலிருந்தது
கொட்டை எழுத்தில்
கோயில்நகர் என்ற அறிவிப்புப் பலகை!
சடாரென்று ‘கோயில்நகர்’ என்று
கூச்சலிட்டார் சுநேகா,
நகரமே திரும்பிப் பார்க்கும்படி!
ரொம்ப நன்றி என்றது பலகை
உன்னைப்போல
களங்கமின்மையும், களிப்பும்
எழுச்சியுமிக்க மனிதர்களை
இப்போதெல்லாம் எங்கே பார்க்கமுடிகிறது?
ரொம்ப மகிழ்ச்சியம்மா
உன்னைக் கண்டதிலும் வரவேற்பதிலும்
என் வாழ்வே நிறைவடைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது!
கோயில் இருந்தென்ன
பக்தி இருந்தென்ன
பழம்பெருமைகள் இருந்தென்ன
வாழ்வை மனிதன் இழந்துவிட்டால்
என்ன இருந்து என்ன பயன்?
நாம் இதுகாறும்
கட்டியிருந்த வீடு
பாதைகளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லைதானே?
வீட்டுக்கு இணையான தொகையுடன்
வாங்கிய கார்
பாதையைப் பற்றிக் கவலைப்படுகிறது!
நான்கு சக்கரங்களும்
நான்கு திசைகளைத் தேராமல்
ஒரே திசைநோக்கியே ஓடுகின்றன
நான்கு திசைகளுக்கும்
போகவேண்டுமெனினும்
ஒன்றுபோல் கூடியே
ஒரே திசைவழியேதான்
நான்கு திசைகளையும்
பார்த்து வருகின்றன
நீண்ட மவுனத்திற்குப் பிறகு
சுநேகா பேச ஆரம்பிக்கும்போதெல்லாம்
மழலையுடன்
பேச்சைத் துவங்குகிறார்
ஏன்?
அப்படியெல்லாம் கேட்கமுடியாது
அது அப்படித்தான்
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
மெய்ச்செயல்கள் பிறக்கும்
புதையலையும் அதன் இடத்தையும்
அவன் அவர்களுக்கு -
கூச்சலிலும் குழப்பங்களிலும்
புலம்பல்களிலும் மாட்டிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு எப்படிக் காட்டப்போகிறான் ?
வாய்திறந்தால்
முத்து உதிர்ந்துவிடும் என்றா
பேசாமல் நிற்கிறாய்?
(அது அப்படித்தான்
இயேசுகூட சொல்லியிருக்கிறாரே
பன்றிகள்முன் முத்துக்களை எறியாதே என்று!)
தலையில் குடம்
விழுந்துவிடும் என்றா
நிறைபானம் அலம்பிச்
சிந்திவிடும் என்றா
இப்படி ஆகிவிட்டாய்?
(உன்னால் கண்டுபிடிக்க
இயலவில்லையா அன்பா?)
நீ கல்யாணம் செய்திருக்கக்கூடாது
எங்காவது சாமியாராகப் போயிருக்கலாம்தானே?
(எல்லோரும் சாமியாராகாதவரை
மீட்சி இல்லை அன்பா! மேலும்
பிரச்னைகள் திருமணங்களில் அல்ல
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
ஓர் உலகம் ஓர் வீடு என்றாகிவிட்ட
மலை உயர அடுக்கக மாளிகையின்
ஒரு லிஃப்ட் அறையில்
இதற்கு முன்பு
நாடு மொழி இனம் சாதி கடந்த
அந்நியர்கள்
இவ்வளவு நெருக்கமாக
நின்றுகொண்டிருப்பதைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்!
எந்த ஒரு இரகசியச் செயல்பாடாக
இவையெல்லாம் நடக்கின்றன என்பதையும்
உணர்ந்திருக்க மாட்டீர்கள்?
லிஃப்ட் அறையில்
நெருக்கமாக நான்குபேர்
ஒரு நற்காலை மணத்துடன்
அலுவலகப் பயணப்பைகளுடன்
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல்...
ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்தவர்கள் போன்ற
புன்னகையும்தான்
எத்துனை அழகு! அற்புதம்
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதை ”நல்லதோர் வீணை” கவிதைத் தொகுப்பில் உள்ளது.
இடிந்துவிடாமல்
வானத்தைத் தாங்கிக் கொண்டன
விரிந்த கைகள்
கால்கள் மண்ணில்
அழுத்தமாக ஊன்றிக் கொண்டன
“எல்லோரும் இன்புற்றிருக்கும்
உலகைக் கண்டடையும் வரை
இங்கிருந்து என்னால்
இறங்க முடியாது, அன்பா!”
கண்களும் காதுகளும் உள்ளோர்க்கெல்லாம்
அவர் குரல் கேட்கத்தானே செய்யும்?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
அன்புடையவர்களாய் நாமிருந்தால்
அன்பைத் தேடி, புகழைத் தேடி
அலைவோமா நாம்?
நிறைவுடையோராய் நாமிருந்தால்
செல்வத்தைத் தேடி, செல்வாக்கைத் தேடி
அலைவோமா நாம்?
தன்மய்யம் கொண்டோராய்
புன்மையப் பாதைகளிலெல்லாம்
அலைவோமா நாம்?
எல்லோரும் கவிஞர்களாகாதவரை
நமக்கு விடுதலை இல்லை என்பவன் எப்படி
போட்டி, பொறாமை, பேராசை, மேலாண்மை
பயம் கொண்ட உலகில் அலைவான்?
இந் நிகழ்வு 10.10.2025 அன்று கேள்வி பதில் பாணியில் இனிதே அமைந்தது.
கவிஞர் தேவதேவன் தன் பால்ய பருவம் பற்றி உரையாடுகையில் மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
முதலாவது, அவர் குழந்தை பருவத்தில் இருந்தே சொல் எடுத்து வார்த்தையாடுவதில் ஈடுபாடு இல்லாதவராகவும், அதற்கு நேர்மாறாக தன்னை சுற்றி நிகழ்வனவற்றில் அதிகம் கவனம் உள்ளவராகவும் இருந்தார் என்பது.
இரண்டாவது, அவர் சகோதரி அவர்களுடைய தந்தையாருக்கு புத்தகம் படித்து காண்பிக்கும் பழக்கம் உடையவராக இருந்ததால், மிக சிறிய வயதிலேயே கேள்வி ஞானமாகவே நிறைய புத்தகங்களை அறியும் வாய்ப்பை பெற்ற ஒருவராக இருந்தார் என்பது.
மூன்றாவது அவர் 1948 ஆம் வருடத்தில் பிறந்தமையாலும், 1945 உலகப் போர் பற்றிய உரையாடல்கள் அவரை சுற்றி நிகழும் சூழல் நிலவியதாலும், அச்சூழல் அவருள் எழுப்பிய கேள்விகளை அச்சிறு வயதிலேயே கொண்டவராக இருந்தார் என்பது.
கவிஞர் தேவதேவனின் தந்தை ஈ.வெ. ரா அவர்களின் அபிமானி என்பதால் அவரிடமே தன் மகனுக்கு பெயரிடும்படி கேட்டு கொண்டார். ஈ.வே. ரா அவர்களும் கைவல்ய நவநீதம் எனும் தத்துவநூலின் (ஆசிரியர்: தாண்டவராய முதலியார் ) மேல் கொண்ட தீவிர ஈடுபாட்டால், நன்பர்களால் கைவல்யம், கைவல்ய ஸ்வாமிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டவரும், தனது பெரும் மதிப்பிற்குரியவருமான அன்பர் பெயரை குழந்தைக்குச் சூட்டினார். தனக்கு நினைவு தெரியும் வயதை அடைந்ததும் அப்புத்தகத்தை நூலகங்களில் தேடி சென்றதாகவும், தன் 19ஆவது வயதில்தான் வெளியூர் நூலகம் ஒன்றில் அதை வாசித்ததாகவும், அத்தேடலில் பிற தத்துவ புத்தகங்களை வாசிக்கும் நல் வாய்ப்பு அமைந்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.
இத்தனை தத்துவ தரிசனங்களும் மனிதனை ஆற்றுப்படுத்த தவறியதைத் தான் உணர்ந்ததாலே, அதை பற்றி தீவிரமாக சிந்தித்ததாகவும், அச்சிந்தனையில் இருந்து தான் கவிதையின் மதம் என்ற தரிசனத்தை தான் அடைந்ததாகவும் கூறினார்.
நம் தற்கால வாழ்க்கை முறை இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி இருப்பதால், நாம் மெதுமெதுவாக இயற்கை மீது நமக்கு இருக்க வேண்டிய அன்பையும் அக்கறையையும் விட்டு விலகி மனிதனால் உருவாக்கபட்ட சின்னங்களையும் உருவ சிலைகளையும் கொண்ட மதங்களின் வழிப்பாட்டை சென்று அடைந்துவிட்டோம். மதத்தை ஒரு பற்றுகோளாக இறுக பற்றி கொள்ளும் பண்பு மனிதத்திடையே தோன்றிவிட்டது. மதங்களிலேயே திளைத்த மனித மனம் கவிதை தருணங்களை உணரும் ஆற்றலை இழக்க தொடங்கியது.
மனிதம் மனிதத்தை நோக்கி நிறைவான பயணம் ஒன்றை மேற்கொள்ள தேவையான எல்லா தரிசனங்களையும் கவிதையின் மதம் தன்னுள் கொண்டிருக்கிறது. அது ஓன்றே எல்லோர் உள்ளும் உறங்கும் கவிஞனை தொட்டு எழுப்பும் வல்லமை பெற்று உள்ளது, அவ்வாறு நிகழும்போதே அமைதியும் பெருவாழ்வும் அமையும் என்பதே அவர் கூற்று.
ஒரு கவிதை என்பது பெருவெளி நம்மை நோக்கி பெரும் நேசத்துடன் நீட்டும் ஒரு கரம் என்றும், அதை பற்றிகொண்டே நாம் ஒவ்வொருவரும் மேலெழ முடியும் என்பதையும் ஆணித்தரமாக முன் வைக்கிறார்.
ஒரு சிறந்த கவிதை என்று எதை கூற வேண்டும் என்ற கேள்விக்கு அவர் பதில் உரைக்கையில், நாம் நம் கவி மனம் கொண்டு உணரும் தரிசனங்களே கவிதைகள் ஆகின்றன. இயற்கை, உறவுகள், செயல்கள், பெயர்கள், அகநிலை சொற்கள் யாவற்றிலும் கவிதை உள் உறைந்துள்ளது. அவற்றை வெளி கொண்டு வருபவனே கவிஞன் ஆகிறான் என்கிறார். கவிதையை விமர்சனம் செய்யும் அளவுகோளும் அதுவாகவே இருக்க வேண்டும் என்றும் மாறாக காட்சி விளையாட்டுகளையும் சொற் சேர்கைகளையும் கவிதை என்று மயங்கி கொள்ள கூடாது என்பதையும் கூறுகிறார்.
நாம் நம் நெருங்கிய நண்பரிடம் ஆத்மார்த்தமாக உரையாடும் போது எவ்வாறு அர்த்தம் பொருந்திய ஒரு உணர்வு நிலையை கொண்டிருப்போமோ அதே உணர்வு நிலையிலேயே கவிதையும் எழுதப்பட வேண்டும் என்கிறார்.
8000கும் மேற்பட்ட கவிதைகள், சில சிறுகதைகள், ஒரு நாடகம், ஒரு கட்டுரை தொகுதி என்று அனைத்து இலக்கிய வகைகளின் ஊடாக சென்று கொண்டிருக்கும் அவர் பயணத்தில் நாமும் ஒரு சில மணித்துளிகள் இணையும் நல்வாய்ப்பு கிடைக்க பெற்றோம்.
நன்றி,
பிரியா, பெங்களூர்.
பெண்ணை விரும்பும்
ஆணின் இளமையோ அது?
சிலுவையணிந்து
வெள்ளுடைதரித்த
கன்னிகாஸ்திரிகளல்லவா
அவனைக் கவர்ந்தார்கள்?
காண்பதை மட்டுமே விழிகளால்
வலியுறுத்துமாப் போல் ஒளிர்ந்த
ஹிஜாப் பெண்களல்லவா
அவனைக் கவர்ந்தார்கள்?
சின்னஞ் சிறு வயசிலேயே
ஆண்டாள் அல்லவா
அவனை ஆட்கொண்ட தேவதை?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
ஒரு சிறுவன் கிடுகிடுவென
என்னமாய் ஓட்டிச் செல்கிறான்!
ஒரு சிறு சக்கரம்
அதன் மய்யப்புள்ளியைத்தான்
மனிதன் தன் பாதங்களால்
இயக்கவேண்டும் என்பதை
கண்டுகொண்டவனும்
கடைப்பிடிப்பவனும்
காட்டிக்கொண்டு செல்பவனுமாய்
ஒரு சிறுவன்!
எத்துணை பெரிய மேதை!
அற்புத மனிதன்!
ஞானி!
அய்யஅ ஒரு மிதிவண்டி…
என்பவன்தான்
எத்துணை பெரிய அஞ்ஞானி
மடையன்!
எதைக் கொடுத்தாலும்
எவ்வளவு கொடுத்தாலும்
கண்டுகொண்டு
பற்றிக் கொள்ளத் தெரியா மடையன்!
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
வானமா பொழிகிறது
(என்று நினைக்கிறாய்?)
பூமிதான் மெய்வருந்த
பாடுபட்டிருக்கிறது அன்பா!
பொழுதெல்லாம்
பரிதி மாமலரைப்
பார்த்துக் கொண்டேயிருப்பது தவிர
பூமியில் மலர்ந்துள்ள
மலர்களுக்கெல்லாம்
வேறென்ன வேலை?
ஹேப்பி தீபாவளி என
வந்து நின்றது ஒரு ஜோடி
அணையாத மத்தாப்பும்
அடங்காத வெடி ஓசையுமாய்!
வானமும் பூமியும்
கொண்ட காதல்?
அல்ல, அல்ல!
பூமி தனக்குத் தானே
மூட்டிக் கொண்ட
பேரின்பம்!
பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)-
மேலேயிருந்து
பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான்
எத்துணை பெரிய
கொண்டாட்டம்! குதூகலம்!
கூடக் கூடப் பெருங்களி!
நெருங்கி நிறையப் போவதையும்
பிரியப் போவதையும் உணர்ந்தபடிதான்
எத்துணை இன்பத் துயரோலம்!
முதன் முதலாக
தன் பெயரைப் பற்றி
அவர் தன் அன்னையிடம் கேட்டார்
அன்னை அதன் பொருளை
உரைத்த அந்த நாளிலிருந்து
எல்லாம் மறைந்து
ஒரு பெரும் பொறுப்பு மட்டுமே
அவருடையதாய் ஆனது.
அது செயல்படுகையிலெல்லாம்
அவருடையது என்பதும் மறைந்து போனது.
மனிதர்களில் வேறுபாடில்லாதபோது
ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்?
ஒரு மனிதனை நம்பி
மிகப் பெரிய பணி
ஒன்றில் இறங்கியாயிற்று
நிறைவேறுமா நிறைவேறாதா-
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும்
மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன்.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
வழிநடையில் ஒரு ரயில்பூச்சி
மிதிபட்டு இறந்து கிடந்தது
பார்வையற்ற மனிதனாலல்லவா?
அவன் பார்வையிழந்ததும்
ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
கொடி உலர்த்தும் ஆடைகளோடும்
வண்ணப் பூந்தொட்டிகளோடும்
ஒளியைத் தவிர
வேறெதையுமே
தேக்கிவிடாத தளத்தோடும்
வானமே தவமெனக் கொண்டிருக்கும்
மொட்டை மாடியின் ஓர் மூலைக்குக்
குடைபிடிக்கிறது மரம்
பலத்த தயக்கத்துடனே.
எவர் தவத்தையும் கலைத்துவிடாமல்
கூர் தீட்டவந்த பணியாளர்களாய்
பறவைகளின் குரல்கள்.
இந்த அதிகாலை வேளையின்
ஆரம்ப ஒலிகளாய்
வலியுணர்த்துவதும்
வழி சுட்டும் சோர்விலா விழிப்பிற்கான
ஆற்றலைப் படைப்பதுமாய்
பறவைகளின் கூட்டொலிகள்!
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
நீர் கசியும் கண்களில் காணப்படுவது
தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும்
கருப்பு அல்லி அல்லவா?
இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
பசுங்கிளைகளில் இருந்ததைவிட
ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட
ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட
அவன் இதயப் புனலிலல்லவா
நெடுங்காலம் வாழ்கின்றன
இந்த மலர்கள்?
தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியுமான அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் என்ற நூலுக்கு எழுதிய வாழ்த்துரை.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தனியாயிருக்கும்போதும்
நிரம்பியிருக்கும்போதும்
காலியாயிருக்கும்போதும்
எப்போதுமே
கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது
தன்னுள்ளிருக்கும்
பொன்இன்மையையே அல்லவா?
கவனி இயற்கையை!
என்றது ஹைக்கூ
பிறகு
கவனி சொற்களானாலும்
என்றது
அதன் பிறகு
எதையானாலும்
கவனி என்றது ஹைக்கூ
கடைசியில்தான் அதற்கே தெரிந்தது
கவனி என்பதுதான்
தான் சொல்ல விரும்பிய
மெய்ச் செயல் என்பதும்
பின்தொடர முடியாததும்
பற்றிக்கொள்ள வேண்டியதுமான
பேராசான் என்பது!
கைபேசி புகைப்படச்
சவுகரியம் கண்டவுடனேதான்
ஒரு காட்சி ஒன்றுதான்
தான் என்ற பொய்மையை
வெட்கத்துடன் அது துறந்துவிட்டதும்!
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
தோட்டப் பணியாளர்களாய் நான்கு பேர்_
ஒருவர்
முதுமையும் சோர்வும் கொண்டவராய்
வேலை செய்யாமல்
இதமாக குளிர்ந்து வீசிய காற்றில்
இளைப்பாறிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எளிய மனிதர்களின் ஒரே ஆறுதல்
இந்த இயற்கை மட்டும்தானே?
அவனைப் பார்த்துவிட்டவர்
“என்ன சார், சாப்பாடு ஆச்சா?” என்றும்
”இன்று பண்டிகை உணவுதானே” என்றும்
நலம் உசாவினார்.
“ஆங். ஆச்சு!” என்றவனுக்கு
அவர் முதுமையும் ஏழ்மையும், சோர்வும்தான்
தாக்கியது.
என்னென்ன துயரங்கள், வலிகள்
மனக்குறைகள் மனிதர்களிடம்!
இவை எல்லாமாலும்
மழுங்கிவிட்ட மனதால்
மனிதர்களையும்தான்
எப்படி நேசிக்க முடியும்?
இந்த இயற்கையையும் பேரன்பையும்தான்
எப்படி முழுமையாய் அனுபவிக்க முடியும்?
அன்பா,
நாம் காணவேண்டியதையும்
கண்டடைய வேண்டியதையும் நோக்கியா
நடந்து கொண்டிருக்கிறோம்?
இவர் கவிதைகளில் மூன்று மிக முக்கிய கவிதைகள் என் உறக்கத்தை களவு கொண்டது என்றே சொல்ல வேண்டும். எதை சந்திப்பில் கேட்கிறோமோ இல்லையோ இந்த மூன்று கவிதைகளை பற்றி அவரிடம் பேச வேண்டும் என்று செல்லும் முன்பே திட்டமிட்டு இருந்தேன்.
முதல் ஒன்று, “புதிய ஏற்பாடு”.. நீலி இதழுக்காக எழுதப்பட்டது. பெண்களுக்கே உரித்தானது தாய்மை, என்றெல்லாம் பிதற்றி கொண்டு இருந்த போதிலும் இந்த உலகையே அன்னையாக்கி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி அவர் கண்ட உலகை நிச்சயமாக பெண்ணான நான் ஒரு நாளும் சிந்தித்தது இல்லை.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
கவிதையை நீங்கள் இங்கே வாசிக்கலாம்...
முழுநிறையுடன் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள்
மரிப்பதில்லை,
முழுநிறையை இந்த உலகம்
அடையாததால்!
மரணத்தை அறிந்தவர்களாததால்
அவர்களுக்கு
துயரமும் அத்தோடிணைந்த
இன்பமும் கிடையாது. வெகுமதியாக
இயற்கையின் ஒத்திசைவுதரும்
முடிவிலாப் பேரின்பமும்
பெருநிறைவும் உண்டு.
முழுநிறைவில்லா அரைகுறை மனிதர்களும்
மரிப்பதில்லை
மரணத்தை அறியாத மூடர்களாதலால்
இன்பத்துடனும் துன்பத்துடனும்
முடிவிலாப் போர்களையும் துயர்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்!
அவருக்கு கடை கண்ணிகளுக்குப் போய்
காய்கறிகள் வாங்க
பழங்கள் வாங்க –
வீட்டு மரத்திலிருந்தும்
பழங்கள் காய்கள் பறிக்க தெரியும்
அடுக்களையில் உறைந்தபடி
சமைக்கத் தெரியும்.
தேநீர் போடத் தெரியும்
முடங்கிக் கிடக்கும் முதியவர்களைப்
பேணத் தெரியும்.
ஆசாரமாய்த் தொழத் தெரியும்
கோயில் செல்லத் தெரியும்
கோலம் போடத் தெரியும்
நல்ல நாட்கள், கிழமைகள்
பண்டிகைகள் என்று
கடவுளையும் நன்கு சமைக்கத் தெரியும்
நீங்கள் எப்படி?
நாம் எப்படி?
நாம் அவரைவிட
வித்தியாசமானவர்களா?
நம் அகம் எப்படி?
“அய்யோ, நேரமாச்சு
ஆத்துல என்ன தேடுவா” என
வேகமாக எழுந்துகொண்ட தீபா
அறிவாரோ
தான் விட்டு எழுந்துவிட்ட இடத்தை?
நாம் அறிவோமோ
நம் அகத்துக்கு வெளியேயே இருந்துகொண்டு
எப்போதும் நம்மைத் தொட்டுத் தழுவியே
அழைத்துக்கொண்டேயிருக்கும் அம்ருத மாருதத்தை?
அமைதியாக நாம் அமரும் வேளையில், நம் உடலின் ஒரு கை மற்றொரு கையையும் காலையும் தடவுவதில் உள்ள உறுப்புகளின் நேசிப்பும் அதில் மறைந்துள்ள அன்பையும் கூறி நெகிழ வைத்தார். தொடர்ந்து, நமக்காக பணிபுரியும் மனிதர்கள் எல்லோருமே நம் உடல் உறுப்புகள் போன்றவர்கள் என்பதைக் குறிப்புணர்த்தி, நாம் அந்த மனிதர்களோடு எத்துணை அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் கனிவாகச் சொன்னார்.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புறப்படுமிடம் இறங்குமிடம் உறுதியாகிவிட்ட
புகைவண்டியில் ஏறி அமர்ந்தாயிற்று.
உண்பது அருந்துவது முதலான
எந்தச் செயல்களிலும்தான்
எத்துணை நிதானம்!
சுற்றியுள்ள உடன் பயணிகளிடமும்தான்
எத்துணை இணக்கம்! தொடர்ந்தால்
நிகழற்கரிய பரிவும், புதிய உலகும்
நிகழ்ந்துவிடும் போலல்லவா தெரிகிறது?
மணம் மிக்க சிவப்பு மலர்_
முகர்ந்தபடி, முகரத்தந்தபடி
பறைந்தார் நண்பர்:
“பெருங்கள்ளி என்பது இதன் பெயர்
இதன் பிறப்பிடம் பிலிப்பைன்ஸ்” என்றார்
அவனுக்கோ
பெயர் மறந்துவிடுகிறது
அதன் பிறப்பிடம் மறந்துவிடுகிறது
இந்த பூமியில் என்பதும்
ஒரு மலர் என்பதும்
போதாதா என்றிருக்கிறது?
அம்மா மடியில் அமர்ந்து கொண்டால்
ஏன் இந்தக் கும்மாளம் வராது?
நானும் ஒரு காலத்தில் இப்படி
என் அம்மா மடியில் இருந்து கொண்டு
துள்ளாட்டம் போட்டவன்தானே?
ஆனால் மானசா
அங்கே அந்தக் கூட்டத்தில்
ஏற்பவர் எல்லோர் மடியிலும்
மார்பிலும் சாய்ந்து கொண்டு
கொண்டாட்டம் போட்டபடி…
ஏதோ சொல்வது போலில்லை?
பெருந்தயைப் பெருவெளிக்கன்றி
வேறு எங்கு போய்ச் சேரும்
சூழ்ந்துவிட்ட மழைக்குள்ளே
வேகமாய் ஊடுறுவிச்
சென்று கொண்டிருக்கும் கார்?
ஓநாய்க் குலத்திடமிருந்து
ஒரு குழந்தை உருவினை வந்தடைந்து
மனிதனை நெருங்கி
அவன் கைபிடித்து
வழிகாட்டிபோல் நடந்துவரும்
இந்தக் காரியம்
யாருடைய செயலாய் இருக்கக் கூடும்?
காலம்?
இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பது?
காலம் அவசியமா?
கண்ட ஒரு கணம் போதாதா?
உதிராத பசிய இலைகளுக்கிடையே
உதிர்ந்தும் உதிராது சிக்கிக் கிடந்த
பொன்இலை ஒன்றைக் கையிலெடுத்துப்
பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.
அதை எங்கே விடுவதென்று அறிந்தவனோ?
அறிய முடியாமையின் உலகிலிருந்து வந்து
அறிந்தவற்றால் துயருற்று
துயர்களைய வந்தவனாய்
இந்தக் காற்றுவெளியிடையே நின்று
க-விதை தூவிக் கொண்டிருப்பவனோ?
எத்துணை துயரத்துடன் நம் கலையரங்குகளில்
வந்தமர்ந்து கொண்டிருக்கிறார், நம் அன்னை!
கண்ணா,
நாம் மரங்களை
வெட்டிக் கொண்டேயிருக்கிறோம்!
காடுகளை அழித்துவிட்டோம்!
முதலில்
நாம் நிறைய மரங்களை வளர்ப்போம்
காடுகளைப் பேணுவோம்
அப்புறம்
போன்சாய்க் கலைகளில் ஈடுபட்டு
நம் அன்னையின் முகத்தில்
புன்னகையைக் காண்போம்!
அழுத்திச் சொல்வதற்கு
ஒன்றுமில்லாதிருந்ததுதான்
அழுத்திக் கொண்டிருந்தது,
நூலக அலமாரியில்
அடுக்கப்பட்டுள்ள
அனைத்துப் புத்தகங்களுமாயிருந்த
அவர் புலமை!
அவர் புகழ்!
கனியின்
பூ மலரும்
ஒரு கணத்தையும்
கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ
இந்த உலகில்?
காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில்
பூக்கவே பூக்காத ஒரு மலர்
பார்வை மின்னலில் அறுந்துவிழும் சங்கிலியால்
கண்டடைந்த பொன்வெளிதானோ
கனியும் மலரும்?
என்ன பிழை இது?
இனி எப்போதும்
கவனமாக இருக்க வேண்டும் என்பதை
உணர்த்திக்கொண்டே இருக்கிறது
கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க
எடுக்கப்பட்டுவிட்ட புகைப்படம்?
துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.
அந்த அற்புத இசையின் பின்னால் நின்றபடி
இத்துணை உக்கிரமாய்
அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருப்பது யார்?
நிலைகுலைய வைக்கவில்லையா
செயல்களனைத்தையும் சாதிக்கக்கூடிய
எத்துணை பெரிய அற்புத இசையையும்
சுத்தமாகத் தகர்த்துவிடும்
பின்னால் ஓடத் துவங்கும் நம் சிந்தனைகள்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
ஆழமற்றதும் ஆபத்தானதும்
தந்திரங்களாலானதுமான
பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு
என்பவற்றால்
அன்பு எனும் பெயராலே
காலம் காலமாக
நம்மையும் உலகையும்
ஏமாற்றிக் கொண்டேயிருப்பவர்கள்தாமே, நாம்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
புண்பட்ட கோணல் மனிதர்களால்
உருவானதல்லவா
போரும் குழப்பமும் வலிகளுமான
இந்த உலகம்?
ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மனிதனைக்கூட காண முடியவில்லை
என்ற மனிதன்
தனக்குள்ளாவது
ஒரு மரத்தையோ மனிதனையோ
கண்டிருக்க மாட்டானா?
தன் துயர் என்பதே இல்லாதிருந்ததால்தானே
அன்புடையவனாயிருந்தான் அவன்?
தன் துயர் அல்ல
துயர்மலி உலகின்
பெருந்துயர்தானே
பரிவு என்றும் பேரன்பு என்றும்
அவனிடம் இருந்தது?
நான் நான் நான் எனும்
நம்முடைய துயர்களிலிருந்து பிறப்பவைதானே
போர்களும் குழப்பங்களும் வலிகளும்?
இந்த உலகத் துயரங்களே
நம்முடைய துயரங்கள் எனும்
மானுடத் துயரங்களாகும்போதுதானே
பிறக்கின்றன
அன்பு, பரிவு, பேரன்பு, கடவுளின் ராஜ்ஜியம்
என்பதெல்லாம்?
நம்முடைய துயருக்கும்
மானுடத் துயருக்குமிடையே
மின்னற் பொழுதுதானே தூரம்?
அனைத்து வாழ்வுகளும் மகத்தானவை. அதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருந்தால் போதும்
அறியாமை மற்றும்
அறிய முடியாமையையும்
அறிதல்தானே
அறிகிறது?
அறிவாகி
தன்பெயரையே கெடுக்கிறதையும்
அனைத்து துயர்களுக்கும்
பெருந் தீமைகளுக்கும்
காரணமாகிவிடுகிறதையும்
அவன் (அறிவு) வேறு
இவன் (அறிதல்) வேறு என்பதையும்
அறிதல் தானே அறிகிறது?
எவ்வளவுதான் பெரியவனானாலும்
அவனை, தனக்குரிய இடத்தை விட்டு
எங்கும் நகராதபடி கட்டிப்போட்டுவிட்டு
அவனோடு நாம் எவ்வளவு எச்சரிக்கையோடு
இருக்க வேண்டும் என்பதை
அறிதல்தானே சுட்டுகிறது?
நம்பிக்கை, நம்பிக்கையின்மை
இரண்டுமே அறிவாகி
முடமாகி விட்டிருக்கிற உலகில்
அறிதல்தானே எதுவாகவும் மாறாத
ஆற்றலாக இருக்கிறது?
அனைத்து துயர் இருளையும்
விரட்டியடித்துவிடத்தக்க
ஒளியாக இருக்கிறது?
அறிதல்தானே
பார்க்கவும் கேட்கவும் கவனிக்கவும் சொல்கிற
வழிகாட்டியாக இருக்கிறது?
மனிதனல்ல,
எந்த மனிதனுமில்லாத
ஆளுமைப் பண்புகள் என்றேதுமில்லாத
அறிதல்தானே மகாஞானியாக-
பேராளுமையாக இருக்கிறது?
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
நிறுவ வேண்டுமல்லவா?
”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம்
கவிதைதான்” என்றபடி போஸ் கொடுக்க
ஒரு கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தினோம்.
“கடை விரித்தோம், கொள்வாரில்லை”
என்று சொல்ல
நாம் ஒன்றும் பழைய வள்ளலாரில்லையே
பார்த்துவிடலாம் ஒரு கை!
காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?
அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?
மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?
மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?
நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?
மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?
கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது. கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டு, ரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும், பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.
.
அடைய வேண்டிய இடத்தையும்
தன்னுடைய வீட்டையும்
பேரமைதி மிளிரும்
நிதானமான நடையையும்
கண்டு கொண்ட பேருயிர் !
தான் கண்டுகொண்டதிலேயே
மாட்டிக் கொண்ட சிற்றுயிர் !
ஒன்றுதான் அது
உள்ளதுதான் அது
ஆனால் அது
செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே
கடவுளாக இருக்கிறது?
தன்னை மய்யம் கொண்ட
எந்தச் செயலிலும் இல்லாதது
ஒன்றிலிருந்தும்
உள்ளதிலிருந்தும்
ஊற்றெடுத்து வருகிறது.
நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து, எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார். தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின், கவிதையின் தீவிரத்தை உணர்த்தியது. நான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்தது, உணர்த்த முனைந்தது– பேரன்பு, கருணை, களங்கமின்மை, உறுதி, காதல், காலமும் இடமும் இலாத நிகழ்தல், இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.
அடைய வேண்டிய இடம்
என்று ஒன்றுண்டா?
இங்கே வந்துவிடுங்கள்
இங்கே வந்துவிடுங்கள்
என்று சொல்வதற்கு என்று
ஓர் இடம் கிடையாது
ஆனால்
இதை விட்டுவிடுங்கள்
இதை விட்டுவிடுங்கள்
என்று சொல்வதற்கோ
ஒவ்வொரு நொடியும்
ஒரு முந்தைய நொடி உள்ளது.
நாம் விட்டு விடுதலையாகி
நிற்கும் போதெல்லாம்
அடைய வேண்டிய இடத்திற்குத்தான்
வந்து சேர்ந்துவிடுகிறோம்.
அது ஒரு இடம்கூட அல்ல
நாம் தான் அது
இந்த பேரண்டம் !
எந்த ஒரு சொல்லிலும்
சிக்கிக் கொள்ளாது
ஒளிரும் பேருண்மை!
அல்லது
ஒளி மற்றும் பேருண்மை!
எதுவானாலும் சரி
அது சொல்லப்படுமபோது அல்ல
விட்டு விடுதலையாகி
ஒரு பொருளாகவோ செயலாகவோ
இருக்கும்போதுதான் அது உண்மை.
இப்போது "நாம்தான் அது" என்ற சொல்லை
எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறோம்?
மானுடத் துயர் கலக்காத
எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப்
பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது
வானளாவிய பெருமரத்தின்
உச்சாணிக் கிளையில்
வந்தமர்ந்து கொண்டிருந்தது?
பெயரும் உருவமுமில்லாத ஒன்றின்
சிறியதொரு பெயரும் உருவமும்?
மோனப் பெருவெளியின் ஒரு பிஞ்சுக்
குரல் சொல் உரு.
ஒரு சொல்லால் அனைத்தையும்
உபதேசித்து விட முடியுமா?
அங்கிருந்து- அசையாமல்
அது நின்று கொண்டிருந்தது-
நகர்ந்தது. அபூர்வமாய்!
வானில் சிறகடிக்கும் ஒரு பறத்தல்
உபதேசமும் உபதேசப் பெருக்கமுமான
வியர்த்தம்தானா?
தானே இல்லாதபோது தான் எப்படி
அதை உபதேசித்திருக்க முடியும்?
ஒரு சொல்தானே பறந்து கொண்டிருந்தது
அதில் எங்கே இருக்கிறது உபதேசம்?
ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க முடியும் உண்மைக்கு
பிறருடைய இடம் எங்கிருக்கிறது ?
கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை
இந்த பூ மரத்திடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
காற்றின் தீண்டலில், பூத்துப் பூத்துக்
காணுமிடத்தையெல்லாம்
முத்தமிட்டுக் களிக்கும் இந்த மரம்
இந்த வான்மீன்களிடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
பேரொளிரும் ஆனந்தப்
பெருவெளியிடமிருந்துதானே
கற்றிருக்க வேண்டும்
இந்த வான்மீன்களும்?
கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை!
பயணம் முடிந்து
வீடு வந்து சேர்ந்த
இரண்டு நாட்களாய்க் காய்ச்சல்.
வாட்ஸ்அப்பில் யாரும்
அச்சச்சோ காட்டவில்லையே
எனக் கவலை தெரிவித்ததற்கு
“சார், நீங்கள்
கவிதையல்லவா அனுப்பியதாக
எண்ணினோம்” என்கிறார்கள்!
மென்மையான சூட்டில்
யாரோ அவனை
வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மானுடப் பசியாற்றும்
அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே?
சாலச் சமைந்த அப்பம் போலும்
சுட்ட கிழங்கு போலும்
நனி கனிந்த பழம் போலும்
அவர், எத்துணை அழகாய்_
துக்கத்தையும்
துக்க நீக்கத்தையும் கண்டுகொண்ட
தேவதை போலத்தானே காணப்படுகிறார்;
அமைதி கொள்வதற்கன்றி
கவலை கொள்வதற்கோ
களி கொல்வதற்கோ
என்ன இருக்கிறது?
அவன் வாணாளில்
தீவிரமான நோய்கள் வந்தபோது
இருந்திருக்கலாம்.
எண்ணங்கள் கைவிட்டுவிடும்
இளம்பருவத்தில்
அவன் அதை அனுபவித்திருக்கலாம்,
ஞாபகமே இல்லை என்றாலும்
வாடும் முகங்கள் மூலம் அதனை
கேள்விப்பட்டிருக்கத்தானே செய்கிறான்?
இன்று இந்த 78ம் வயதின் பயணத்தில்தான்
அவன் அந்த விருந்தாளியைச் சந்திக்கிறான்
ஆண்களானால் தங்கள் காதலியையும்
பெண்களானால் தங்கள் காதலனையும்
கடவுளானால் கடவுளிடமே இளைப்பாறும்
கடவுளின் துயரையும் கண்டதுபோல்
அப்படி ஒரு நெருக்கமான உறவும்
உறவின் இன்பமும் தவிர வேறேது?
ஒரு கணம்தானா
நாம் அதிசயித்து நின்ற நேரம்?
மின்னலை விளக்காக்கிக் கொள்ளத்
தெரியாத பேதைகளாய்
மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில்
சுருண்டு கிடப்பதுதானா நம் அவலம்?
கண்ட நாள் முதலாய்
அலையும் ஒளிச்சுடராய்
பூமியெங்கும் சுற்றி,
உலவிக் கொண்டிருக்கிறது காண்
ஒரு வண்ணத்துப்பூச்சி!
இந்த வேற்று வெளியினிலே
புன்னகைக்கும் எல்லோருமே
என்றும் அறிந்தவர்களாகவே
தெரிகிறார்கள்
நெருங்கிவிட்டவர்களாகவே
தெரிகிறார்கள்
இங்கே எதுவாகவும் நாம் ஆகலாம் என்றிருக்க
எதுவாக விரும்புகிறது நம் உள்ளம்?
ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து
பலவாகியதென்றாலும்
அந்த ஒவ்வொன்றிலும்
முதல் ஒன்று இருந்தது.
பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும்
பலப் பல இணைந்து இணைந்து
ஒரு ஒரு விதையாக ஆனவற்றுள்ளும்
அந்த முதல் ஒன்று இருந்தது.
விதை எத்துணை முக்கியமோ
விருட்சம் அத்துணை முக்கியமாக இருந்தது
அத்தோடு
விருட்சம்தான் விதை
விதைதான் விருட்சம் என்பதும்
ஒவ்வொரு இடத்திலும் அந்த முதல் ஒன்று
தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதும்
தெளிவாகவே இருந்தது.
மனிதன்தான் மனித சமூகம்
மனித சமூகம்தான் மனிதன் என்பதையும்
ஒவ்வொரு இடத்திலும்
அந்த முதல் ஒன்று தொடர்ந்து வருகிறது என்பதையும்
சொல்லவும் வேண்டுமா?
ஒரே ஒரு வேறுபாடு
நாம் சொல்லியே ஆக வேண்டும்
மனிதன்தான் உண்மை
மனித சமூகம் என்பது
நம் கற்பனை படைப்பு.
ஒரு இலட்சியம், ஒரு கண்டுபிடிப்பு
முதலில்
ஒரு தனி மனிதனிடம்தானே தோன்றுகிறது?
பல்லாயிரம் உயிர்களிடமிருந்து தோன்றியவன்தான்
ஒரு மனிதன் என்றாலும்
பல்லாயிரம் மனிதர்களிடமிருந்தல்லால்
ஒரு மனிதனிடமிருந்துதானே
ஒவ்வொரு காலமும் ஒரு புதிய கண்டுபிடிப்பு
ஒரு பெருவிழிப்பு தோன்றுகிறது?
என்றாலும் அதற்காக அந்த மனிதன்
புகழுக்குரியவனாவானோ?
ஆன்றமைந்த மனிதனே எனில்
மெய்ம்மை அறிந்தவனே எனில்
அவன் அதை விரும்புவானா?
எல்லாப் புகழும் அவனைத் தோற்றுவித்த
பல்லாயிரம் உயிர்களுக்கும்
அவர்கள் உறவாகி வளரும்
மனித சமூக மனங்களுக்குமல்லவா உரியது?
நாம் செல்ல வேண்டிய இடத்தைச்
சொல்லிவிடவில்லையா,
கண்ணெதிரே
இரட்டைச் சடையுடன் ஒரு மலர்முகம்?
ஒளியை மறந்துவிடுவார்களோ என்று
திகைக்க வைக்கின்றனர்
கொஞ்சநேரம்
நிழல்களோடே
விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!
நடைபாதையின்
சதுர சதுரத் தளக் கற்களுக்கிடையே
ஒரு ஊசி நுனி இடைவெளி கண்டு
உட்புகுந்துவிட்டது ஒரு புல்!
அது வளர்கிறது! வளர்கிறது!
மனிதனின் பாதையில்
கண்டிப்பாய்
அவன் பார்வையை எட்டிவிடும்படியாய்!
கண்மருந்துச் சொட்டுடன்
அய்ந்து நிமிடங்கள் விழிமூடியிருக்க
காலத்தை உங்கள் கையில்
ஒப்படைத்துவிட்டல்லவா
அவன் தன் அன்பனுடன்
மூழ்கிவிடுகிறான்?
பிரதி உபகாரக்
காதல் வெளிப்பாடாய்
காலத்தோடும் அவனுக்குக்
கடமைகளிருக்கிறதல்லவா?
காதல் எனும் செயல்வடிவம் கொண்டதோ
காற்று?
உபவன மாஞ்சோலைக்குள்
ஒரு காற்று
பெருங்கூட்டமாக
குழுக்களாக
தனித்தனியாக
பிரிவிலாத ஒன்றின்
பேருயிராக
பேருரையாக.
இவையெல்லாம் சொற்கள்
மானுட உளறல்கள்
சமயங்களில்
ஆபத்தானவைகளும்கூட
சொற்களைத் தவிர
நம்மிடம் வேறொன்றுமில்லையா
செயல்கள்? பொருள்கள்?
நம் செயல்களுக்கும் பொருள்களுக்கும் மட்டுமே
உரித்தானது என்பதைக் காட்டுவதற்குத்தானா
நம்முடைய எந்தப் பிடிக்குள்ளும்
அகப்படாமல் போய்க்கொண்டே இருக்கிறது
காற்று?
இந்தக் காற்று வெளியிடையே அல்லவா
காதலையும் காதலின் இரகசியங்கள்
அத்தனையையும் அவன் அறிந்து கொண்டான்!
எப்போதும் சிலிர்சிலிர்க்கும்
பெருங்களியுடனும்
எப்போதாவதுதான்
அசையாத மவுனத்துடனும்
வாழ்கின்றன இந்த மரஞ்செடிகொடிகள்!
வருடிச் செல்லும் காற்று
சொல்லிச் சென்ற பேருண்மையை
எத்தனை முறைகள் அவனும் அதனைப் போலவே
சொல்லிக்கொண்டேயிருக்கிறான்!
வான்வெளியில் பேரொளிரும் ஒரு பொருளைப் பற்றி
எங்கும் விரிந்துகிடக்கும் ஒளியைப் பற்றி
இரு மண் துகள்களுக்கிடையிலும்
நின்று துலங்கும் சூரியனையும்பற்றி
எத்தனை முறைகள் அவனும்தான்
சொல்லிக் கொண்டே இருக்கிறான்?
முழு ஆற்றலுடன்
தனக்குத் தன்னையே
பின் உந்தமாக வைத்துக்கொண்டு
ஒரு சிறு
தூண்டலுக்காகக் காத்திருக்கிறது
மெழுகுவர்த்தி!
அடிக்கடி
அந்தரத்தில் நின்றே
(என்னஅஅ அழுத்தமாய்ச்)
சிறகடிக்கிறது தும்பி!
ஏன்?
என் வாசகர்களுக்கு
நான் சொல்ல வேண்டியதே இல்லை
என்கிறது அது!
எப்போதும்
அமைதியும் ஆழ்ந்த யோசனையுமாய்
இருப்பது போல் தோன்றிய
அவனை நோக்கி
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
என்றார் துணைவியார்
எத்துணை பெரிய தேவவாக்கு! அக்கறை!
ஆங், அது எனது மரணமல்லவா என
அலறிக்கொண்டு முழித்தது மூளை!
ஆங், அப்போதுதானே நான் வருவேன் எனக்
களி கொண்டு குதித்தது வாழ்க்கை!
‘இரண்டுபேரும் (ஒற்றுமையாய்)
சற்று அமைதியாயிருக்க மாட்டீர்களா’
என்று அதட்டியது பெரிசு!
அவன் நடை உலாவும் உபவனத்தில்
அன்று பூமியின் பச்சைக்குடம்
பாலமுதாய் நிறைந்து
பொங்கி வழிந்தோடுவது போல
சிலந்தி அல்லிச் செடிகளின்
வெண்மலர் வரிசை…
பெருவெளியெங்கும்
ததும்பி அலையடிக்கிறது
பேரமைதி கொந்தளிக்கும்
அதன் ஆட்டமும் பாட்டமும்
யாருடையவோ இதயத்தை
எதிரொலிப்பதுபோல!
அறிமுகமற்ற மனிதர்களானாலும்
ஒரே வழியில் எதிர்ப்பட்டவர்களாய்
புன்னகைத்துக் கொள்ளும்
மனிதர்களில் ஒருவர்
அன்று புதிதாய் வாய்மலர்ந்து
காலநிலையையும்
காற்றையும் வெளியையும் புகழ்கிறார்.
சொல்லமுடியாத ஒன்றை
மொத்த உலகிடமும்
பகிர்ந்து முடித்துவிட்டவர்கள் போலும்
இத்தகையதோர் பெருநிலைதான்
பொங்கிவழிந்து
நிறை பெருகிக் கொண்டிருக்கிறதைக்
கண்டு கொண்டவர்கள் போலும்…
அவன் உன்னை நெருங்கியபோது
அவன் மூச்சு உட்கொண்ட உன் நறுமணம்
இந்த மொத்த உலகையும் நேசித்த
மலர்களிடமிருந்து நீ பெற்றுக்கொண்டதாலோ
பிற பொழுதெல்லாம் அவன் உடலும் உயிரும்
இம் மொத்த உலகையும்
நேசிப்பதாய் மாறிவிட்டுள்ளது?
இக் கவிதையினை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பனே,
வேகத் தொற்று ஒன்றால்
நாம் இந்த உலகை மாற்றிக் கொண்டிருப்பதைப்
பாராய்!
எவ்வளவு உயரமானாலும்
மேலேயும் கீழேயும்
ஏறி இறங்கும் மின் ஏணிகள்
மனிதர்களை நசுக்கிவிடாததும்
வழிவிடுவதுமான
நுண் உணர்வுக் கருவிகள்
உறுதியான பாதுகாப்பு முறைகள்
ஒழுங்கினையே உயிர்மூச்சாய்க் கொண்ட
இன்னும் எத்தனை எத்தனை பணி இயந்திரங்கள்!
கண்டுகொள்ள முடியாதது எதுவுமில்லை எனும்
கண்காணிப்புக் காமிராக்கள்
கடவுளின் விழிகளென செயற்கைக் கோள்கள்
இத்தனைக்குப் பிறகும்
வறுமையில்லாத
அறமின்மையில்லாத
துயரில்லாத
அழகான
உலகைப் படைக்க முடியாது
தடுத்துக் கொண்டிருப்பது எது?
அந்த இடத்தில்
பேரமைதியோ பெருங்களியோ
ஒளிர்வதே இல்லை.
(ஆ, இதைக் கண்டுகொண்டாலே போதுமே
பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை
நாமே கண்டு இயற்றி விடலாமே?)
யாராவது எதையாவது கேட்டு
தான் மக்கு என்பதையும் முட்டாள் என்பதையும்
கண்டுபிடித்துவிடுவார்களே என்றுதானே
அந்த இடம் தன்னை
தீராத நோயாளியாய் மாற்றிக் கொண்டிருக்கிறது?
நம்மை மக்காக முட்டாளாக நோயாளியாக
மழுங்கடித்திருப்பது எது?
ஆ, இதைக் கண்டுகொண்டால் போதுமே
பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை
நாம் கண்டு இயற்றி விடலாமே!
நாமற்ற நாமால்!
மனம் பறிகொடுத்த
வியப்புக் களியுடன்தான்
அவன் அந்தப்
புதிய பென்சிலைப் பார்த்தான்
ஒரு நுனியில் எழுதும் கரி
மறு நுனியில்
தவறு நேர்கையில் அதை அழிக்கத்
தயாராய் இருக்கும் அழிப்பான் துண்டு
எழுதக் குவிகையில்
கவனத்தின் உச்சியிலிருக்கிறது அழிப்பான்
கண்ட பிழையை அழிக்கக் குவிகையில்
அதன் உச்சியிலிருக்கிறது
அணையாத தயார்க் கனலுடன் எழுதுகரி
செயல்கள் எல்லாம் செயல்களல்ல
பொழுதுபோக்கும் கலைகளிலிருந்தல்ல,
காலத்தை நிறுத்திக் காட்டும்
கவிதைகளிலிருந்தே
செயல்கள் பிறக்கின்றன.
செயல்கள் என்றால் என்ன?
கவிதை என்றால் என்ன?
அன்பு என்றால் என்ன?
அழகு என்றால் என்ன?
உண்மை என்றால் என்ன?
யாராலும் சொல்லித்தர முடியாதது
ஒருவன் தானே அறிந்துகொள்ள வேண்டியது
தானே அறிந்துகொள்ளாதவரை
தன்னில் பொய் சூடிக்கொள்வது
ஒரு பழம்
பதினெட்டு துண்டுகளாய்
ஒரு தட்டில்!
பதினெட்டு துண்டுகளும்
ஒரு முழுப் பழமாவதற்கு துடிதுடித்ததில்
ஒவ்வொரு துண்டும்
ஒரு முழுப்பழமாகிவிட்டது!
அவர்களிடம்தான் இப்போது
எத்துணை கனிவு!
எத்துணை இனிப்பு!
எத்துணை அழகு!
எத்துணை நிறைவு!
ஆண்கள் வெளிப்படையாகவே
அதை வைத்திருக்கிறார்கள்
பெண்கள் அந்த மீசையையும் தாடியையும்
தங்கள் உள்ளே மறைத்து வைத்திருக்கிறார்கள்
அந்தப் பூங்காவின் மரநிழல் பெஞ்சில்
ஓர் இணையர்.
அவர்கள் நடுவே
கண்ணுக்குத் தெரியாத உருவினனாய்
ஓர் அறிஞன் வந்தமர்ந்துகொண்டு
குறுக்கே குறுக்கே பேசத் தொடங்கினான்
முதலில் நீ இங்கிருந்து போடா வெளியே
என்று அடித்து விரட்டத் தொடங்கினார்
கோபம் கொண்ட அந்தப் பெண்மணி!
ரோஜா மலர்களுக்கு
உரமேற்றுகின்றன
கருப்பு முத்துக்களான
ஆட்டுப் புழுக்கைகள்_
அன்பே,
இந்தக் கவிதைகள் உனக்கு
உரமேற்றாதா?
வெறுப்பும் கசப்புமிக்க மனிதர்களால்
பீநாறி என்றும்
அன்பும் அழகுணர்வுமிக்க மனிதர்களால்
நித்திய கல்யாணி என்றும்
நயன்தாரா என்றும்
பக்திகொண்ட மனிதர்களால்
பூஜைப் பொருளாகவும்
அறிவியல் ஆய்வாளர்களால்
மருத்துவப் பொருளாகவும்
பார்க்கப்படுகிறது
மனிதர்களின் உணர்வுகளை அறிந்ததும்
எதற்குமே சடைக்காததும் மயங்காததுமான
பேராளுமைத் திடம்கொண்ட ஒரு மலர்.
கண்ணாடியுள்ளிருந்துகொண்டு
ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
எண்ணிறந்த பிம்பங்கள்.
உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றிலும்
நான் நான் என்றே
துடிக்கும் பிம்பங்கள்.
கண்ணாடி மறைந்துவிடும்படி
தனை அறிந்த மனிதவெளியில்தான்
பிறக்கிறது
தானற்றதொரு பெருவெளி
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்!
காலமும் இடமும்
பத்தரை மணி தூரம் என்கிறது
இரண்டரை மணி தூரம் என்கிறது
அய்ந்து மணி தூரம் என்கிறது
நான்கு மணி தூரம் என்கிறது
கைபேசியோ
மின்னற் பொழுதே(தூரம்) என்கிறது
அதனால்தானோ
கைபேசியுடன் பேசிக் கொண்டு செல்லும்
சில மனிதர்களிடம் இத்துணை மலர்ச்சி!
அருட்பெருஞ்சோதித் தனிப் பெருங்கருணையின்
செயல் முறைப் பாடமாய்
மானுட உள்ளமும் இணைந்து விட்டது!
பார்வையில் விரியும்
பெருங்களமெங்கும்
மலர்ந்துவிட்டன காண்
தானியங்கிச் சாலைகள்!
மலை உச்சியிலே
ஒரு கிராமம் நிலவ முடியும்போது
வான் உச்சியிலே
ஒரு மாடம் நிலவ முடியும்போது
மலை உயர ஒரு கட்டடத்திலேயே
ஆயிரம் இல்லங்கள்
அமைதியாக வாழமுடியும்போது
நம் உதிரத்திலேயே ஒரு பறவை
கூடு கட்ட முடியும்போது
ஏன் முடியாது அன்பா
இப் பூவுலகிலேயே கடவுளின் ராஜ்ஜியம்?
மலை உச்சியிலே
வேறு வேறு மதங்கள் கொண்ட
வேறு வேறு கோயில்களின்
வேறு வேறு துதிப்பாடல்கள்!
இந்தப் பாடல்கள் எல்லாமே
மலை கண்டுகொண்ட
மவுனத்திலிருந்து வந்ததென்றால்
இந்தப் போரும் குழப்பங்களும் இவ்வுலகில்
இருக்குமா மக்களே?
பாடுவது எது?
ஓடும் நதியா
கூழாங் கற்களா
வளியா வானமா
யாருமில்லாத வெளியில்
யார்தான் பாடுகிறார்கள்?
யார்தான் கேட்கிறார்கள்?
ஒத்திசைவுதான் பாடுகிறது!
ஒத்திசைவுதான் கேட்கிறது!
நானற்ற இழைகளால் நெய்யப்பட்ட
குண்டு துளைக்காத ஆடைகளை
நீ அணிந்து கொண்டால் போதுமா?
பகையையும் பாதுகாப்பையும்
பயத்தையும் வெறுப்பையும்
போர்களையும் துயர்களையும்
அவற்றின் ஊற்றுக் கண்ணையும்
அதைக் கண்டு கொள்வதால் மூடி
அங்கேயே திறந்து கொள்ளும்
பேரன்பின் ஊற்றையும்
அது தரும் குண்டு துளைக்காத ஆடையையும்
உரைக்க வேண்டாமா
உன் வாழ்வும் சொற்களும்?
சுயம்வரமா நடந்துகொண்டிருக்கிறது?
பேருக்கும் புகழுக்குமா இப்படி…?
தனக்கு இல்லாவிட்டாலும்
தனது சாதிக்காரனுக்கு என்று,
மானுட இயல்புதானே இது என்று
காலம் காலமாய்
மக்கு மனிதர்களாகிக் கொண்டு
கொலை பாதகங்களைப்
புரிந்து கொண்டிருக்கிறார்கள்
இங்கிருந்துதான் அனைத்து தீமைகளும்
அழியாது விளைந்து கொண்டிருக்கின்றன
என்பதறியாமல்?
பசியும் பட்டினியும்
பயங்கரமாய்க் கொந்தளிக்கும்
பஞ்சம்.
ஒரு விநியோகத்தின் முன்னால்
கூட்டமாய் இடித்துக் கொண்டு
எனக்கு, எனக்கு, என் உறவினர்களுக்கு எனக்
கொதித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்,
கண் இமை நுனிகளிலேயே கொலைவாட்களை
ஒளித்து வைத்திருப்பவர்கள்
கருணை தரும் களிப்பின் இரகசியமறியாதவர்களாய்
குமைந்து கொண்டேயிருப்பவர்கள்
உலகம் ஒரு குடும்பம் என்பதை
ஒரு நாளும் கண்டறியாத அறிவிலிகள்!
சத்தியத்தைச் சிலுவையிலறைந்துவிட்ட பாவிகள்!
பிதாவே இவர்களை மன்னியுங்கள்
அச்சத்தினாலே
இவர்கள் தாங்கள் செய்வது
இன்னதென அறியாதிருக்கிறார்கள்!
பெங்களூருவிலிருந்து த்ரிஷா
மும்பைக்குப் போகும்படியாயிற்று
இடைக்கிடைக்கு பெங்களூருவுக்கும்
வந்து போகிறார்
பெங்களூருவில் இருக்கையில்
குறிப்பாக எங்கள் அபார்ட்மெண்ட்
மக்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொள்கையில்
அவர் வாழ்ந்த அஸ்ஸாம் பீகார்
மக்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்
அப்போது
பெருநகர சிறுநகர வாழ்க்கை குறித்து
நாங்கள் சற்று அலசியுமிருக்கிறோம்
இப்போது மும்பை.
பெங்களூரு இந்திய மக்களெல்லாம்
கூடிய இடமென்றால்
மும்பை உலக மக்களெல்லாம் கூடிய இடம்
என்பதை உணர்த்துமாறு
நிறைய பேசிக்கொண்டே இருந்தார்
அந்த எல்லாப் பேச்சுக்களையும் தாண்டி
அவன் உள்ளத்தை நிறைத்ததும்
நினைவிலிருக்கும் ஒன்றே ஒன்றானதும்
அவர் சொன்ன ஒரே வாக்கியம்தான்:
“They are very kind”
அற்புதமான அவனது எந்த அனுபவங்களும்
இடத்தாலும் காலத்தாலும்
நிகழ்ந்தவையாய் இல்லாதபோது
அதை எப்படி
பெங்களூரு நாட்கள் (தூத்துக்குடி நாட்கள்)
என்று சொல்வான், இப் பூமியிலுள்ள
மற்ற எல்லா இடங்களும் காலங்களும் வந்து
கோபித்துக் கொள்ளாதா?
கொஞ்சம் பொறுங்கள்
மேலே உள்ள தலைப்பையும்
அழித்துவிடுகிறேன்!
கிறிஸ்துவச்சியான சோஃபியா
கவிஞரால்
“நீ கவிஞர்களின் புதல்வியல்லவா”
என்றே அடிக்கடி செல்லமாகக்
கொஞ்சப்படுபவள்!
திருநீறும் திலகமுமாய்
அவள் உலவுவதைப் பார்த்து
அதிர்ச்சியும் வியப்புமடைபவர்களைப் பார்த்து
“சும்மா ஒரு அலங்காரம்தான்!” என்பாள்.
கடல்மீது எழுந்து நிற்கும்
காலைக் கதிரவனாய் அல்லவா
ஒளிர்கிறது அவள் நுதல்!
ஒரு கோணமாய்க்
கிடந்தது
பெண் அவர் துயில் உடல்.
ஓர் இணைக் கைகளும்
ஓர் இணைக் கால்களும்
கூடிக் கிடந்த
அன்பின் ஆழமோ
சொல்லில் அடங்காது!
கட்டான உடலுடைய பெண்களைக்
காணும்போதெல்லாம்
தேவதைகளும்
குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம்
குழந்தைகளும்
நினைவுக்கு வருகிறார்களே என்ன?
இந்த பூமியை
நாம் ஒரு கோயில் என உணர்வதற்கு
ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும்
விக்கிரகங்களாக உணர்வதற்கு
தானாக நிகழும் ஒவ்வொரு செயல்களும்தான்
கடவுள் என உணர்வதற்கு
நாம் செய்ய வேண்டியதென்ன?
யாராவது சொல்லிக்கொடுத்து நிகழ்வது செயலாகுமா?
தானாக நிகழ்வதல்லவா செயல் என்பது?
எப்படியோ ஒரு விதை தோன்றி
வந்து விழுந்துவிட்டதுதானே
இப் பேரண்டத்திற்குள் கோள்களாகவும்
பூமியெனும் ஒரு கோளில்
கோடானு கோடி
உயிர்களாயும் தாவரங்களாயும்
மலர்ந்து விட்டன?
மதத்தைத் தேடும் மனிதனுக்கு அவர்கள்
கோடானு கோடி விக்கிரகங்களாய் கடவுள்களாய்க்
குறிப்புணர்த்தாததாலோ (அ) கண்டுகொள்ளப்படாததாலோ
மனிதன் கடவுளையும் விக்கிரகங்களையும்
படைத்துக் கொண்டு
சக உயிர்களையும் தாவரங்களையும்
மறந்து திரிகிறான்?
கோடை ஆரம்பித்து விட்டது
காற்றும் மிக மிக மெல்லியதாகி
வேகங்கொண்டு
வனமெங்கும் வெளியெங்கும்
களைத்து மூச்சு வாங்கிய போதுதான்
ஆங்காங்கே அவ்வப்போது
அமைதியாக உட்கார்ந்திருக்கிறது
யார் இருக்கிறார்கள் இங்கே?
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டங்களும்
அமைதியான இசையும் மட்டும்தானே இருக்கிறது இந்த உலகில் ?
இந்த நெல்லி மரத்தில் கனிகள்
கூட்டாகவா தனித்தனியாகவா
தொங்கிக் கொண்டிருக்கின்றன?
கூட்டாகவும் தனித்தனியாகவும்
என்கின்றன அவை ஒருமித்த குரலில்.
அவர்கள் சொல்வது பிரிவு எனும்
துயர்ப் பொருள் கொண்ட தனிமை அல்ல.
முழுமையாய் அமைந்து
முழுமையைப் பரப்பத் துணிந்த தனிமை!
அவைகளை உதிர்த்து
ஒரு மூட்டையில் கட்டினார் தோட்டக்காரர்
அப்போதும் கூட்டாகவும் தனித்தனியாகவும்தான்
இருக்கிறோம் என்றனர்!
மூட்டையை அவிழ்த்து
தரையில் கவிழ்க்கவும்
சிதறி ஓடப் பார்த்தன சில கனிகள்
மேலே மேலே விழுந்து மோதி
கூடிக் கொள்ளவே பார்த்தன சில கனிகள்.
மொத்தத்தில் அப்போதும்
கூட்டாகவும் தனித்தனியாகவுமே இருந்தனர்
பிரிவு எனும் அவலத்தனிமை கொண்டவர்களாயல்ல.
(மரணமற்ற பெருவாழ்வைக் கொண்ட)
கனிகள் அல்லவா?
மனிதன் துவைத்து உடுக்கவேண்டிய
ஆடைகளை
சூடான இரும்புப் பெட்டி கொண்டு
அழுந்தத் தேய்த்து முடித்து
ஒழுங்கு கூட்டி
அவன் அடுக்கி அடுக்கி வைப்பதற்கு
எவ்வளவு கனல் வேண்டும் என்பது
அவன் அறியாததா?
பொட்டுத் தீ கனலும் பீடி கொண்டே
தன் உடலைப் பேணிக் கொள்கிறான் அவன்.
பயில்வானுடையது போலிருக்கும்
ஒரு புஜம் தவிர்த்து அத்தனை உறுப்புகளும்
ஒரு குச்சிப் பூச்சியினுடையது போலிருக்கின்றன
இவன் ஆற்றல்களையெல்லாம் உறிஞ்சிவிட்டது
இந்த உழைப்பு மட்டும்தானா?
இவனது பிற நாட்டங்களையெல்லாம்
கவனித்திருக்கிறீர்களா?
இரண்டு நண்பர்கள்
பிரிய மனமின்றியே
சண்டை போட்டுக் கொண்டு
எவ்வளவு காலமாய்
இப்படியே
பிடிவிடாமலும் நிற்பார்கள்?
பின்புறத் தோளில் நீளமாய்
காற்றோடு கொஞ்சி உரையாடியபடியே வரும்
முந்தானையை அல்லது துப்பட்டாவை
முகத்திற்கு வெகு அண்மையிலிருந்தும்
கண்டுகொள்ளாமல்
தன்பாட்டில் ஆடிக்கொண்டிருக்கும்
மயிர்க்கற்றைகளை
ஒரு எண்ணம் தோன்றும்போதெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்.
அதே போலத்தான் அவர் இவனோடு
பேச நேர்கையிலெல்லாம்
பற்றி அடக்கிக்கொள்கிறார்
இன்னும் எத்தனை எத்தனை அழகினர் அவரிடம்
எத்துணை அழகும் அமைதியும்
சுடர்மதிக் கவனமும் கொண்ட பேரழகினர்
ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாதவர்களாய்!
அவனிடம் என்ன இருக்கிறது?
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது
அந்தச் சொற்றொடரும் கழன்று விழுந்தபோது
திகம்பரர்கள் என்று
ஆகப் பெரிய ஆடம்பரமான
அம்மணத்தை அணிந்தவர்களாய்
நடந்தவர்களை எண்ணியபோது
அந்த எண்ணமும் சொற்களுமே
கழன்று விழுந்தபோது
அவனிடம் என்ன இருந்தது
திக்குகளையே ஆடையாகக் கொண்டவன்போல்
அவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது?
நடைபாதையில் கோயில்வாசல்களில்
பிச்சைக்காரியாய் அமர்ந்துவிட்ட
அந்தப் பெண்ணுக்கு
அன்னை இல்லையா? காதலன் இல்லையா?
எப்போதாவது வந்து சிரிக்கவைக்கும்
கடவுள் போதுமா?
காமவெறியர்களையா தேடிக்கொண்டிருக்கிறாள்?
பிரச்னை உலகைக் கண்டுகொள்ளாமல்
புலனின்பங்களில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்!
எதையாவது யோசித்துக்கொண்டேயிருக்காமல்
நிகழ்காலத்துக்கு வா நிகழ்காலத்துக்கு வா என்று
அழைத்துச் செல்லப்பட்டுதான்
திவ்யா மேடம் திருமணவிழாவிற்கு அவன் வந்து நின்றான்.
நீங்கள் யாராயிருந்தாலும் சரி
எப்போதாவது - ஒரு கணம் –
நீங்கள் இதனைப் பார்க்கத்தானே செய்திருப்பீர்கள்
பற்றி சுடர் இயற்றத் தெரியாதவர்களாயினும்?
பழைய கவிதை புதிய கவிதை எனக் குழம்பாமல்
நித்ய சவுந்தர்யம் கொண்ட வாழ்வை
நித்யஸ்ரீயை
இயற்றுவதையே இலட்சியமாகக் கொண்டவர்கள்தாமே?
அன்னை தன் மகளையோ
ஆண்மகன் தன் காதலியையோ
அவள் தன்னைத் தானோ
இல்லை அழகின்மீதே அழகுதானோ
இப்படித்
தானற்ற வெளிதனிலே
தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது
பார்வையை அடிக்கோடிடுவதுபோல்
கண்களுக்கு மையிட்டுக்கொள்கிறார்கள்
புன்னகையை அடிக்கோடிடுவதுபோல்
இதழ்களுக்கு வண்ணம்…
தாவரங்களை நெருங்குபவர்களாய்
கூந்தலில் மலர்கள்…
தனித்ததொரு நட்சத்ரத்தைக் காட்டுவதும்
யாவும் ஒற்றை ஒற்றைத்
துளிகளால் மட்டுமே
என்பதைக் காட்டுவதுமாய் அமைந்த
மூக்குத்தி…
உதயசூரியனை நெற்றிப்பொட்டாகவும்
வண்ண மலர்களையெல்லாம்
ஒளிரும் நட்சத்திரங்கள் மின்னும் ஆடைகளாகவும்
சூட்டிக் கொள்கிறவர்கள் யார்?
அந்த நெற்றிச் சுட்டியும்
பார்வையும் ஒன்றே போதுமென்றாலும்
பூரண நிறைவடைந்துவிட்ட ஓருடலை
கைவளைகள் கால்கொலுசுகள் காதணிகள் என்று
எண்ணற்ற அணிகளால்
ஆராதிக்கும் வண்ணமாயும்
ஒரு செயல்முறைப் பாடமாயும்
சுட்டும் ஓர் அழகினைத்தானே
அலங்காரம் என்கிறோம்
மகாலட்சுமி என்கிறோம்
இன்று
மானுட இலட்சியம் என்கிறோம்
உள்ளதை அறிபவர்கள்தாமே நாம்?
தொட்டு தடவிச் செல்கிறது காற்று
பற்றற்றான் பற்றினைப்
பற்றிக் கொண்ட பேருயிராய்!
காற்றின் தழுவலில்
நாம் காணும் இன்பமும்
காதலின் இன்பமும்
ஒன்றா?
அதேதான் அதேதான்
எனச் சிரித்தன
காற்றிலும் ஒளியிலும்
குதித்தாடும் மரக்கிளைகள்!
எத்தகைய செல்வத்தால்
இத்துணை இன்பக் கொண்டாட்டங்கள்!
என்பதையறியாத சுகஜீவிகளைப்
பார்த்திருக்கிறீர்களா?
காலமற்ற பொழுதுகளின்
கருணைக் கொடையினால் பூக்கும்
ஏழைகளின் களிப்பினைச் சுட்டி சுட்டி
“நன்றாகத்தானே இருக்கிறார்கள்” என
தப்பித்துவாழும் மனிதர்களைப்
பார்த்திருக்கிறீர்களா?
வறுமையையே
ஊனமாகக் கொண்ட
ஏழ்மையுடன்
கோயில் வாசல்கள்முன்
பிச்சையெடுக்கும் மானுடத்தைப்
பார்த்திருக்கிறீர்களா?
நாம் அறிந்திருக்கிறோமா,
ஆசைகள் அலங்கார அகங்காரச்
சுமைகளில்லாமல்
காற்றையும் வெளியையும் ஒளியையும் மட்டுமே
அளாவும் எளிய உயிருக்குத்தான்
பறவை என்று பெயர் என்பதை?
அத்துணை பிரமாண்டமான
துளி அமிழ்தினை விலக்கி
அத்துணை பிரமாண்டமான
துளி விஷத்தை அருந்துவனோ
மனிதன்?
கண்டுகொண்டபின்னே
காதல் தவிர பிறிதொன்றுண்டோ?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP